PUBLISHED ON : நவ 08, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க, தற்போது பழக்கத்தில் உள்ள, முகம் முழுதும் மறைத்து போடப்படும், மெல்லிய பைபர் கண்ணாடியால் ஆன, 'பேஸ் ஷீல்டு' - முகத் திரை, வைரஸ் தொற்றுக்கு மட்டுமல்ல, தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு, வெடி விபத்தில் இருந்தும், கண்களுக்கும் பாதுகாப்பைத் தரும்.
தீபாவளி என்றாலே, புதிய ஆடை, இனிப்புகள் என்று, மகிழ்ச்சியான பல விஷயங்களுடன் சேர்ந்து, பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகளும், பொதுவான விஷயமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும், எங்கள் குழும பிரதான மருத்துவமனைகளுக்கு மட்டுமே, வெடி விபத்தால் ஏற்பட்ட கண் பாதிப்பால், 1,500 பேர் வந்துள்ளனர். ஒரு குழும மருத்துவமனைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை என்பது, இயல்பான செய்தி இல்லை.
இவர்களில், 50 சதவீதம் பேர் தீபாவளி பண்டிகையின் போது, ஒரு நாளில் மட்டும் வெடி விபத்தில் சிக்கியவர்கள்; மீதி, 50 சதவீதத்தினர், ஆண்டு முழுதும் நடக்கும் கோவில் திருவிழா, கார்த்திகை தீபம், திருமணம் என்று, வேறு விசேஷ நாட்களில் பட்டாசு வெடிக்கும் போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.
இதில் வருத்தமான விஷயம், பட்டாசு வெடி விபத்தில் சிக்குபவர்களில், 50 சதவீதம் பேர் குழந்தைகள். அதிலும், பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகள், 80 சதவீதமாக உள்ளனர்.
இதிலும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான அம்சம், பட்டாசு, வெடி வெடிப்ப வர்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்கிக் கொள்வதில்லை; வெடிப்பதை வேடிக்கை பார்த்து நிற்பவர்கள் மற்றும் அந்தப் பகுதியை கடந்து செல்பவர்களே, விபத்தில் சிக்குகின்றனர்.
வெடி வெடிக்கும் போது, அதிக அழுத்தத்தில் வெளி வரும் வெடித் துகள்கள் கண்கள், முகத்தில் பட்டு, காயத்தை ஏற்படுத்துகின்றன.
வெடியிலிருந்து கிளம்பும் அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம். வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, முகம் முழுக்க மறைத்து போடப்படும் பேஸ் ஷீல்டை போட்டுக் கொள்வது, கண்கள், முகத்தில் வெடி, பட்டாசு துகள்கள் பட்டு காயம் ஏற்படுத்தாமல், பாதுகாப்பைத் தரும்.
எல்லா வெடிகளையும் விட, புஸ்வாணம் தான் அதிக ஆபத்தைத் தருகிறது. 'வெடிக்கவே வெடிக்காது' என்று, அலட்சியமாக பற்ற வைப்போம்; அபூர்வமாகவே வெடிக்கும்; எதிர்பாராத நேரத்தில் வெடித்து, கண்கள், முகத்தை பதம் பார்த்து விடும். அடுத்து, வெடிக்காத வெடிகளை சேகரிக்கவே ஒரு கூட்டம் உள்ளது.
பல சமயங்களில் புகைந்தபடி இருக்கும் வெடி, வெடிக்காத வெடி என்று நினைத்து, கையில் எடுக்கும் நேரத்தில் வெடித்து, காயத்தை ஏற்படுத்தி விடும்.
குழந்தைகள்
குழந்தைகளை, 'வெடி வெடிக்கவே கூடாது' என்று தடுப்பது, முடியாத காரியம். குழந்தைகள் வெடி வெடிக்கும் போது, கண்காணிப்பு அவசியம். பெற்றோர் மேற்பார்வையில்
மட்டுமே, வெடிக்க அனுமதிக்க வேண்டும். முகக் கவசத்தை அணிந்து கொள்ள சொல்ல வேண்டும்.
பாதிப்பு
வெடித் துகள்கள் நேரடியாக கண்களுக்குள் சென்று, பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு வகை. எலும்புகளால் சூழப்பட்ட, அதிகம் விரிவடைய முடியாத நிலையில் உள்ள கண் பகுதியில், வெடித்து சிதறும் வெடித் துகள்கள், அதிக அழுத்தத்துடன் படும் போது, கண்களில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்து கிறது. அதிக அழுத்தத்துடன், விரல்களால் கண்களை குத்துவது போன்ற நிலை இது.
பட்டாசு, வெடி வெடிப்பவர்கள் மட்டுமல்லாமல், தீபாவளி நாளில் வெளியில் செல்பவர்களும், பேஸ் ஷீல்டு அணிந்து கொள்வது, நிச்சயம் பாதுகாப்பைத் தரும்.
உறுப்பைச் சுற்றிலும் மெல்லிய திசுக்கள் இருந்தால் விரிவடைந்து கொள்ளும்; பாதிப்பு குறைவாக இருக்கும். கண்கள் அப்படி இல்லை. அதிகம் விரிவடைய முடியாமல், கடினமான எலும்புகளால் சூழப்பட்டு உள்ளதால், சட்டென்று கிழிந்து விடலாம். அதிர்வு கண்களில் படும் போது, வினாடிக்குள் சுருங்கி விரிவதால், கண்களில் உள்ள மெல்லிய சவ்வு கிழியும் அபாயம் அதிகம்.
உடைந்த கண்ணாடி
கண்கள் கண்ணாடி மாதிரி. நான்கு துண்டுகளாக கண்ணாடி உடைந்து விட்டால், ஒட்ட வைத்தாலும், ஒட்டிய கோடு அப்படியே தான் இருக்கும். அது போலவே, கண்களில் கிழிசல் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து சரி செய்தாலும், தழும்பு இருக்கவே செய்யும்; அதனால் ஏற்பட்ட பார்வை குறைவை, தவிர்க்க முடியாது.
கருவிழியில் தழும்பு ஏற்பட்டால், பார்வையை பாதிக்கும். கருவிழி ரத்த ஓட்டம் இல்லாத இடம். எனவே, காயம் ஆறி தழும்பு வந்து விட்டால், தழும்பு மாறுவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.
விபத்து ஏற்பட்டு விட்டால்...
கண்களில் வெடித் துகளோ, வெடி மருந்தோ பட்டு விபத்து ஏற்பட்டு விட்டால், கண்களில் என்ன பாதிப்பு என்பது, பார்த்ததும் தெரியாது. முதலில், சுத்தமான நீரால் கண்களை கழுவ வேண்டும்.
தண்ணீரை வேகமாக கண்களில் அடித்து கழுவுவது, நாக்கை வைத்து துகள்களை எடுக்க முயற்சி செய்வது, வாயால் ஊதுவது என, எதுவும் செய்யவே கூடாது. கழுவிய பின், இமைக்காமல் இருப்பதற்காக, சுத்தமான துணியால் கண்களை கட்டிக் கொண்டு, உடனடியாக டாக்டரிடம் வர வேண்டும்.
வெடி விபத்தால் கண்களில் அடிபடுபவர்களில், 50 சதவீதம் பேருக்கு, நிரந்தர பார்வைத் திறன் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 10 சதவீதம் பேருக்கு பார்வைத் திறனை முழுவதும் இழக்கும் அபாயமும் உள்ளது. கண்களில் அடிபட்டால், கண் டாக்டரிடம் தான் வர வேண்டும்.
கண்களில் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை, கண்களை, 20 மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும், 'மைக்ராஸ்கோப்'பில் பார்த்தால் தான் தெளிவாகத் தெரியும்; 20 - 30 சதவீதம் பேருக்கு, உடனடியாக அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பர்.
கவனம்
குழந்தைக்கு கண்களில் அடிபட்டால், பண்டிகையின் மகிழ்ச்சியே காணாமல் போய்விடும். அதிலும், யாரோ ஒருவர் வெடித்த வெடியால், குழந்தைக்கு பாதிப்பு என்றால், நிலைமை இன்னும் மோசம். 'இப்படி ஆகி விட்டதே...' என்று, மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் போய்விடும். அதீத கொண்டாட்டத்தின் போது, விபத்து நேர்ந்தால், அது குழந்தையின் மனநிலையை மிகவும் பாதிக்கும். பட்டாசு, வெடியை பொறுத்தவரை, கவனமாக கையாள்வதே பாதுகாப்பானது.
டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா,
கண் சிறப்பு மருத்துவர்,
அரவிந்த் கண் மருத்துவமனை குழுமம், மதுரை.
0452 - 4356500
