PUBLISHED ON : மார் 05, 2023

'இரண்டாவது முறை காபி குடிக்கும் எண்ணம் வந்ததுமே, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபி கப்பைத் தொட யோசிக்க வேண்டும்' என்கிறது, ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு!
மிக உயர் ரத்த அழுத்தம் இருந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேல் காபி அருந்துவதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பலவிதமான இதய நாளக் கோளாறுகளால் இறக்கும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
இதய நாளத்திற்கு காபி நன்மை செய்வதாக, இதற்கு முன் வெளியான ஆய்வுகள் கூறின. இந்த ஆய்வின் நோக்கம் என்னவெனில், காபி தரும் பாதுகாப்பு, அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கிடைக்குமா? இதே பிரச்னை உள்ளவர்கள், 'கிரீன் டீ' பருகுவதால், சராசரி நபருக்கு கிடைக்கும் பலன் கிடைக்குமா என்பதை உறுதி செய்வதற்குத் தான்!
இந்த ஆய்வில், ஜப்பான் நாட்டில் வாழும், 30 இனப் பிரிவைச் சேர்ந்த, 40 - 79 வயதிற்குட்பட்ட, 6,576 ஆண்களும், 12 ஆயிரத்து 35 பெண்களும் பங்கு பெற்றனர். இவர்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டனர்.
சராசரி ரத்த அழுத்தம், 130/85; சற்று அதிகம்... ஆனால் சீரான அளவான, 130 - 139/85 - 89; இரண்டாவது வகை, 'கிரேடு - 1' ரத்த அழுத்தம் என்று சொல்லப்படும், 140 - 159/90 - 99; 'கிரேடு - 2' உள்ளவர்கள் 160 - 179/100 - 109; 'கிரேடு - 3' ரத்த அழுத்தமான 180 - 110 எம்.எம்.ஹெச்.ஜி., உள்ளவர்கள் ஐந்தாவது வகையினர்.
இவர்களைத் தொடர்ந்து, 19 ஆண்டுகள் கண்காணிப்பில் வைத்தோம். இதய ரத்த நாளங்கள் தொடர்பான பிரச்னையால், 842 பேர் இறந்தனர்.
அதீத ரத்த அழுத்தம் இருந்தவர்கள், ஒரு நாளில் இரண்டுக்கும் அதிகமான வேளை காபி அருந்தியதால், அவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு, காபி குடிக்காதவர்களை விடவும் இரண்டு மடங்கு அதிகம் இருந்தது.
எந்த வகையினராக இருந்தாலும், ஒரு வேளை மட்டும் காபி, பலமுறை கிரீன் டீ குடித்தவர்களுக்கு உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கவில்லை. சராசரியாக அல்லது குறைந்த அளவு உயர் ரத்த அழுத்தம் இருந்தவர்களுக்கு இதற்கான அபாயமே ஏற்படவில்லை.
ஆய்வின் முடிவில், மிக அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், காபியை தவிர்ப்பது நலம். காரணம், காபியில் உள்ள, 'காபின்' என்ற வேதிப் பொருள், காபியில் உள்ள பாதுகாப்புத் தன்மையையும் மீறி பாதிப்பை தரலாம் என்பது தான்.
- 'ஜர்னல் ஆப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்'
