ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஐந்து நிமிடங்கள்!
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஐந்து நிமிடங்கள்!
PUBLISHED ON : மார் 05, 2023

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடல் நலத்தை பாதிக்கும் என்பது தெரிந்த விஷயம். தினமும் சீராக உடற்பயிற்சி செய்தாலும், அதிக நேரம் ஒரே இடத்தில் உடகார்ந்தே இருப்பது, இதயக் கோளாறுகள், உடல் பருமன் மற்றும் நீண்ட கால உடல் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம்.
உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சரி செய்ய, அதிக உடல் அசைவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போவதும் பலன் தரும். அதேநேரம், எத்தனை முறை, எவ்வளவு நேரம் இது போல செய்ய வேண்டும்?
இதைக் கண்டறிய, 11 பேரை சோதனைக் கூடத்திற்கு வரவழைத்த ஆராய்ச்சியாளர்கள், அவர்களை வெவ்வேறு நாட்கள் வரவழைத்து, தொடர்ந்து எட்டு மணி நேரம், வெவ்வேறு நாட்களில் ஒரே இடத்தில் அமரச் சொல்லி, ஐந்து விஷயங்களை செய்யுமாறு கூறினர்...
முதல் நாள், ஒவ்வொரு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும், ஒரு நிமிடம் எழுந்து நடக்க வேண்டும் அடுத்த நாள், ஒவ் வொரு, 60 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு நிமிடம் நடக்க வேண்டும்.
மூன்றாவதாக, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள், நான்காவதாக, 60 நிமிடங்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். கடைசி நாளில், எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்; எழுந்திருக்கவே கூடாது.
பங்கு பெற்றவர்கள், உட்கார்ந்து இருக்கும் நேரத்தில், 'லேப்டாப்'பில் வேலை செய்யலாம்; மொபைல் போனில் பேசலாம்; படிக்கலாம். நேரத்திற்கு திட்டமிட்ட உணவு தரப்பட்டது. இதயக் கோளாறுக்கு பிரதான காரணமான ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு நாள் முழுதும் கண்காணிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில், மனதில், உடலில் சேரும் எதிர்மறை உணர்வுகளை போக்க, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஐந்து நிமிடங்கள் நடப்பது அவசியமாகிறது என்பது தான் ஆய்வின் முடிவு. இது ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நாள் முழுதும் உட்கார்ந்தே இருப்பதை விடவும், குறைவாக நடந்தாலும் அது ரத்த அழுத்தத்தை 4 - 5 எம்.எம்., / ஹெச்.ஜி., என்ற அளவிற்கு குறைக்கிறது. ஆறு மாதங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து குறைக்கும் ரத்த அழுத்தத்தை ஒப்பிடும் போது, இது பெரிய அளவில் பலன் தரக்கூடிய விஷயமாகவே உள்ளது.
- 'மெடிசின் அண்டு சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அண்டு எக்சர்சைஸ்'
