தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதயத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கு சம்பந்தம் இல்லை!

இதயத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கு சம்பந்தம் இல்லை!

இதயத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கு சம்பந்தம் இல்லை!


PUBLISHED ON : மார் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதிலும், 10 சதவீதம் மக்களுக்கு, ஏதாவது ஒரு வகையில், சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை, 13 கோடி பேருக்கு, சிறுநீரக கோளாறு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

சிறுநீரக பணி



ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை, சிறுநீர் வழியாக வெளியேற்றுவது, சிறுநீரகங்களின் பிரதான வேலை. இது தவிர, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதும், சிறுநீரகங்களின் வேலை தான். நாம் பொதுவாக நினைப்பது போல, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது, இதயத்தின் பணி கிடையாது. ரத்த அழுத்தத்திற்கும், இதயத்திற்கும் சம்பந்தமே கிடையாது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், உப்பை குறைத்து சாப்பிடச் சொல்கிறோம்; உப்புக்கும், இதயத்திற்கும் தொடர்பே இல்லை. உடலில் உள்ள அதிகப்படியான உப்பை, சிறுநீரகங்கள் வெளியேற்றும் போது, ரத்த அழுத்தம் சீராக உள்ளது.

ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டின் தவிர, சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற தாதுக்களை சீராக இருக்கச் செய்வது, எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம், 'வைட்டமின் - டி'யை உற்பத்தி செய்வதும் சீறுநீரகங்கள் தான்.

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க, ரெனின் என்ற ஹார்மோனை, சிறுநீரகங்கள் உற்பத்தி செய்கிறது. ரத்தத்தில், 'ஹீமோகுளோபின்' எனப்படும் ரத்த சிவப்பணுக்கள் சரியான அளவில் இருக்க, 'எரித்ரோபாய்டின்' என்ற ஹார்மோன் சீராக சுரக்க வேண்டும். இதையும், சிறுநீரகங்கள் தான் சுரக்கிறது.

சிறுநீரக கோளாறு



கை, கால் வீக்கம், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம்; அடிக்கடி தொற்று ஏற்படலாம். சிறுநீர் போதுமான அளவு வெளியேறாமல், குறைவாக போகலாம், சிறுநீரக கற்கள் உருவாகலாம். இவையெல்லாமே சிறுநீரக கோளாறுகளுக்கான அடிப்படையான அறிகுறிகள்.

சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்னைகளாக வெளிப்படலாம். 'ஹீமோகுளோபின்' குறைந்து, ரத்த சோகை ஏற்படலாம். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அதிகமாக இருந்தால், சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் தெரியும். இவை எதுவுமே இல்லாமல், உயர் ரத்த அழுத்தம் மட்டுமே, சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.

சர்க்கரை கோளாறு



சிறுநீரகக் கோளாறு இருக்கும், 100 பேரில், 70 பேருக்கு, நீண்ட நாட்களாக சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை கோளாறு என்பது, 100 பேரில் நான்கு, அதிகபட்சம் ஐந்து பேருக்கு இருந்தது. தற்போது, 15 பேருக்கு இருக்கிறது. அதேபோல, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ஆரம்ப காலத்தில், நீண்ட நாட்களாக, இந்த இரண்டு கோளாறுகளுடன் இருந்தவர்கள், சரியான சிகிச்சை இல்லாமல், சிக்கலான பக்க விளைவுகள் ஏற்பட்டு, இறந்து போயினர். தற்போது அப்படி இல்லை. இந்த இரண்டு பிரச்னைகளையும், சீராக கட்டுப்பாட்டில் வைக்க, நிறைய நல்ல மருந்துகள் உள்ளன. இதனால், மருந்து இல்லாததால் ஏற்படும், குறுகிய கால பக்க விளைவுகள், தற்போது அதிகம் பாதிப்பது இல்லை. அதற்கு பதிலாக, நீண்ட கால பக்க விளைவுகளான, இதய கோளாறு, பக்கவாதம், கண்களில் பிரச்னை, கால்களில் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. பாதித்த, 100 பேரில், 70 சதவீதம் பேருக்கு, நிரந்தர சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது.

வாழ்க்கை முறை கோளாறுகள்



உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இரண்டுமே, வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்னைகள். வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே, இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். சிறுநீரக கோளாறையும் தடுக்க முடியும்.இவை இரண்டு தவிர, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தே வேலை செய்வது, துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு அதிகம் சாப்பிடுவது, சிகரெட், மது பழக்கம் எல்லாம், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.வியாதி வந்த பின், உடற்பயிற்சி செய்கிறேன்... உணவில் மாற்றம் செய்துள்ளேன் என்று சொல்கின்றனரே தவிர, நோய் வரும் முன், இதையெல்லாம் செய்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புரிவதில்லை.

2 லட்சம்



நாட்டில், ஆண்டுதோறும், 2 லட்சம் பேர், சிறுநீரக செயலிழப்பால், 'டயாலிசிஸ்' செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இவர்கள் அனைவருக்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், இவர்களில், 5,000 பேர் மட்டுமே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு, டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை இருப்பதால், இதற்கான மையங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தற்காப்பு



வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது தான், முக்கியமான விஷயம். அதிக உடல் பருமனுடன் இருந்தால், உடல் எடையை குறைக்க வேண்டும். உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க பழக வேண்டும். உடற்பயிற்சியை, தினசரி வழக்கமாக மாற்ற வேண்டியதும் முக்கியம். சிகரெட், மது பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆரம்பத்தில் தெரியும் உடல் அறிகுறிகளை, அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கை, கால்களில் வீக்கம் இருந்தால், வேறு ஏதாவது காரணத்தை, நாமாகவே நினைத்து, பொருட்படுத்தாமல் இருக்கக் கூடாது. சிறுநீரில் ரத்தம் வந்தால், நீங்களாகவே, கை வைத்தியம் பார்ப்பதை தவிர்ப்பது பாதுகாப்பானது. 40 வயதிற்கு மேல், ஆண்டிற்கு ஒரு முறை, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது. தலைவலி என்றதும், மருந்து கடையில் போய் மாத்திரை வாங்கி, போட்டுக் கொள்கின்றனர். டென்ஷனால் வந்ததா, உயர் ரத்த அழுத்தத்தால் வந்ததா என்று, மருந்து கடைக்காரருக்கு எப்படி தெரியும்?

இதுபோல, அடிக்கடி சுயமாகவே சாப்பிடும் மாத்திரைகளால், சிறுநீரகங்கள் செயலிழக்காது என்பதற்கு, எந்த உத்தரவாதமும் கிடையாது. இவற்றை எல்லாம் தவிர்த்தாலே, பாதி கோளாறுகளை தவிர்க்கலாம்.கடந்த ஆண்டு இருந்த ரத்த அழுத்தம் இவ்வளவு, உடல் எடை, 80 கிலோ இருந்தது, இப்போது, 5 கிலோ அதிக மாகி விட்டது என்று தெரிந்தால், எடையை குறைக்க நாமே முயற்சி செய்வோம்.உயர் ரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களில், 85 சதவீதம் பேருக்கு பரம்பரையாக வருகிறது. மீதி இருக்கும், 15 சதவீதம் பேருக்கு, ஏதாவது ஒரு உடல் கோளாறின் வெளிப்பாடாக இருக்கலாம்.

இவர்களில், பரிசோதனை செய்தால், 14 சதவீதம் பேருக்கு, பிரச்னை சிறுநீரகங்களில் இருக்கும்.உயர் ரத்த அழுத்தம் இருக்கும் ஒருவருக்கு, பரம்பரையா அல்லது வேறு கோளாறால் ரத்த அழுத்தம் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து, அதனடிப்படையில் மட்டுமே மாத்திரைகளை தர வேண்டும்.என்னிடம் வரும் பல நோயாளிகள், சார், கடந்த ஆறு மாதங்களாக உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுகிறேன். ஆனால், குறையவில்லை என்பர்.பார்த்தால், சிறுநீரகங்களில் கோளாறு இருக்கும்.

பல நேரங்களில், சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகள் தற்காலிகமானதாக இருக்கும். ஆறு மாதம், ஓராண்டு காத்திருந்து, சிறுநீரகங்களை பரிசோதிப்பதற்கு பதில், உயர் ரத்த அழுத்தம் என்று தெரிந்ததும், பரிசோதித்தால், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் அறிய முடியும்.கால் வீக்கம் என்று போனால், கால் வீக்கத்திற்கு ஒரு மாத்திரை, ரத்த அழுத்தத்திற்கு ஒன்று என்று தனித்தனியாக சாப்பிடுவதை விட்டு, பிரச்னை எதனால் வந்தது என்பதை தெரிந்து, அதை சரி செய்தால் தானே தீர்வு கிடைக்கும்?

உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உடனே, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்த்து, காரணத்தை முழுமையாக உறுதி செய்த பின் தருவதே பாதுகாப்பானது.

டாக்டர் பாலசுப்ரமணியம் ராஜு,

சிறுநீரகவியல் மருத்துவர்,

காவேரி மருத்துவமனை,

சென்னை

044 - 4000 6000


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us