PUBLISHED ON : டிச 30, 2012

சைவ உணவு உண்பதாகக் கூறி, பொரித்த உணவுகள், இனிப்பு பண்டங்கள், பால் சார்ந்த நெய், வனஸ்பதியில் தயாராகும் உணவுகள், அதிக அரிசி உணவு உண்பதால், சைவ உணவு எடுப்பதன் பலன் இல்லாமல் போகிறது.
என் வயது, 42. அவ்வப்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. என் டாக்டர்களில் ஒருவர், சி.டி., ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவை எனக் கூற, மற்றொருவர், 'இன்வேசிவ் ஆஞ்சியோ' தேவை என்கிறார். இதில் எதை மேற்கொள்வது?
- எஸ்.குமாரசாமி, திருப்பரங்குன்றம்
இதய ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை, சி.டி., கொரனரி ஆஞ்சியோ பரிசோதனை மூலம், கண்டறியலாம். இது, சில நிமிடங்களில், இதயத்தில் உள்ள அடைப்புகளை தெரிவித்து விடும். இப்பரிசோதனை மூலம், இதயத்தில் அடைப்பு உள்ளதா, இல்லையா என, கூற முடியும்.
ஆனால், இந்த அடைப்புக்கு, மருந்து மாத்திரையா அல்லது பலூன் சிகிச்சையா அல்லது பைபாஸ் சர்ஜரியா என, தெளிவுபடுத்தும் அளவு, சிகிச்சை முறை வளரவில்லை. சி.டி., ஸ்கேன் முடிவு நார்மலாக வந்தால், 'இன்வேசிவ் ஆஞ்சியோகிராம்' தேவையில்லை.
ஆனால், சி.டி., ஸ்கேன் பரிசோதனையில் அடைப்பு இருப்பதாக இருந்தால், இன்வேசிவ் ஆஞ்சியோதான், சிகிச்சை முறையை நிர்ணயிக்கும். இன்றும் ரத்தநாள அடைப்புக்கு, 100 சதவீத பரிசோதனை இந்த, 'இன்வேசிவ் ஆஞ்சியோகிராம்' தான். இதில் கையில் இருந்தோ, காலில் இருந்தோ, 'கதீட்டர்' என்னும் குழாயை செலுத்தி, இதயத்தினுள், பல கோணங்களில் படம் எடுக்கப்படுகிறது.
என் வயது, 52. நான் கடினமான வேலை செய்யும் தொழிலாளி. எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. நான் கடின வேலையை மீண்டும் செய்யலாமா?
- ஆர்.பாலகுருநாதன், ராமேஸ்வரம்
இதய ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளவர்கள், 'ஸ்டென்ட்' சிகிச்சை பெற்றவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், எப்போதும் கடினமான வேலையை தவிர்ப்பது நல்லது. திடீரென, ஒரு கனமான பொருளை தூக்கினால், இதய துடிப்பும், ரத்தஅழுத்தமும், திடீரென அதிகமாகிறது. ரத்த நாளத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பாதிக்கப்படும் தன்மை உள்ளது.
ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளவர்கள், தங்கள் இதயத்தின் செயல்பாட்டு தன்மையை, ஒரு 'ரப்பர் பாண்டு'டன் ஒப்பிடலாம். ரப்பர் பாண்டை ஓரளவே இழுக்கலாம். அதிகமாக இழுத்தால், அறுந்து போக வாய்ப்பு உள்ளது. அதுபோலத் தான், உங்கள் இதயமும்.
'ஓட்ஸ்' உணவை உண்பது எந்தளவு பயன்தரும்?
- சர்மிளா, காந்திகிராமம்
ஓட்ஸ் உணவு வகைகளில் தான், எளிதில் கரையும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. இதில், 'Tocotrienols' என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதனால் நம் உடலுக்கு பல நன்மை ஏற்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால், உணவுப் பாதையில் இருந்து கொழுப்பு சத்து, உடலில் சேர்வது குறையும். இதனால், கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. அதேநேரம், நல்ல கொழுப்பின் அளவை குறைப்பது இல்லை.
தினமும் ஒரு கப், ஓட்ஸ் உணவை தொடர்ந்து எடுத்தால், டோட்டல் கொலஸ்ட்ரால் அளவு, 2 சதவீதம் குறையும் என, தெரியவந்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவு.
எனக்கு 2 ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. டாக்டர், சைவ உணவை சாப்பிட்டால்தான், ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்கிறார். இது சரியா?
- வே.உலகநாதன், திண்டுக்கல்
உலகின் அனைத்து நாடுகளிலும், சைவ உணவு வகைகளை உண்போருக்கு, அசைவ பிரியர்களை விட, ரத்தஅழுத்தம் குறைவாக உள்ளது என்பது, அசைக்க முடியாத உண்மை. ஆனால், இந்தியாவில் இது உண்மை அல்ல. ஏனெனில் நம் சைவ உணவு வகையில், சில குறைபாடுகள் உள்ளன.
சைவ உணவு உண்பதாகக் கூறி, பொரித்த உணவுகள், இனிப்பு பண்டங்கள், பால் சார்ந்த நெய், வனஸ்பதியில் தயாராகும் உணவுகள், அதிக அரிசி உணவு உண்பதால், சைவ உணவு எடுப்பதன் பலன் இல்லாமல் போகிறது. இதைத் தான், 'Contaminated Vegetarianism' என்பர். எனவே நம் சைவ உணவு, நார்ச்சத்து உள்ளதாக இருக்க வேண்டும். பால் சார்ந்த, பொரித்த, இனிப்பு வகைகளை தவிர்த்தால், ரத்த அழுத்தம் குறையும். அசைவத்தில் மீன்சார்ந்த உணவு, முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை எடுப்பது தவறில்லை. அவற்றை, எண்ணெயில் பொரித்து உண்பதே தவறு.
டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை