PUBLISHED ON : செப் 23, 2020

உலக சுகாதார மையத்தின், 'சயின்ஸ் இன் 5' என்ற பகுதியில், தொற்று நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட துறை வல்லு னர்களை கொண்டு பதில் தருகின்றனர். அதில், 'கோவிட் - 19' தொற்று குறித்து, அதிக மாக கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்:
பருவநிலை மாறும் போது, அதிக உஷ்ணத்தில் இருந்து குளிராகவோ, குளிர் அதிகமாக இருந்து உஷ்ணத்திற்கோ மாறும் போது, கொரோனா பரவல் விதத்திலும் மாற்றம் ஏற்படும் என்பது உண்மையா?
இதுவரை நாங்கள் பார்த்ததில், வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. குளிர் பிரதேசங்களிலும் வைரஸ் தொற்று வேகமாக பரவி இருக்கிறது. இதிலிருந்து பருவநிலை, கொரோனா பரவுவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
ஆனால், சில சூழ்நிலைகள் நோய் பரவலை அதிகமாக்குகிறது. அவை, கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, காற்றோட்டம் சரிவர இல்லாத இடங்களில் நெருக்கமாக அமர்ந்து வேலை செய்வது, நோய் பரவலை அதிகமாக்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதியான ஒருவர் குளிக்கும் நீச்சல் குளத்தில், நோய் தொற்று இல்லாத மற்றவர்கள் குளித்தால், நீச்சல் குள நீரின் வழியே தொற்று பரவுமா?
தண்ணீர் மூலமாக கொரோனா வைரஸ் பரவாது. குடிநீர் வாயிலாகவும் வைரஸ் தொற்று பரவவில்லை. கொரோனா பாதித்த ஒருவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது, அவர் அருகில் செல்வது அல்லது ஒரே குளத்தில் பலர் நெருக்கமாக நீந்துவது, வைரஸ் தொற்றை ஏற்படுத்தும்.
எனவே, சமூக இடைவெளியை நீந்தும் போதும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவுமா?
கொசுக்களால் கொரோனா பரவாது. கொசுக்கள் கொரோனா வைரசை பரப்ப முடியாது. ஆனால், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, ஜிகா போன்றவை, கொசுக்கள் வாயிலாக பரவும்.
நோய் தொற்று சர்வதேச பரவலாக மாறும் போது, பல நேரங்களில் தவறான தகவல்களும், செய்திகளும் பரப்பப்படுகின்றன. உண்மையை எப்படி தெரிந்து கொள்வது?
நோய் சர்வதேச பரவலானது போன்றே, தகவல்களும் சுலபமாக பரப்பப்படும் சூழலில் இருக்கி்றோம். உலகம் முழுதும் ஒரு பாதிப்பு ஏற்படும் போது, அது குறித்த தகவல்களும் அதை விட் வேகமாக பரவுகின்றன.
இதனால், எது சரியான செய்தி, தவறானது எது, உபயோகமற்றது எது என்று பிரித்து பார்ப்பதில், இயல்பாகவே மக்கள் குழம்பி விடுகின்றனர்.
இது போன்ற சமயங்களில், உலக சுகாதார மையம் போன்ற நம்பகமான மையங்கள் தரும் செய்திகள், தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத் தன்மையை பல கோணங்களிலும் ஆராய்ந்து, உறுதி செய்த பிறகே வெளியிடுகிறோம்.
டாக்டர் சில்வி பிர்யான்,
இயக்குனர், உலக தொற்று நோய் கண்டுபிடிப்பு மையம்,
உலக சுகாதார மையம், ஜெனிவா

