PUBLISHED ON : ஆக 07, 2021

உணவில் சுவை மற்றும் நிறத்துக்காக பயன்படுத்தப்படும் குங்குமப்பூவுக்கு, உடலின் நிறத்தையும் மாற்றும் சக்தி உண்டு என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.
குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடும் போது, நமது உடலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. இதில் அபூர்வமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால், சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துக்களில், குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.
அழகு சாதன பொருட்களிலும், முகப்பூச்சு கிரீம்களிலும் சேர்க்கப்படுகின்றன. மற்ற எல்லாவற்றையும் விட, கர்ப்பிணிகள் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடுகின்றனர். இதை சாப்பிடலாம் என, மருத்துவர்களும் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
குங்குமப்பூவில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என, ஸஹஸ்ரா ஆயுர்வேத மருத்துவமனை சிறப்பு மருத்துவர் நிகிலா வெங்கட்டிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது:
ஒரு பெண்ணின் பிரசவம் என்பது, மரம் பூத்து, காய்த்து, கனிந்து தானாக கனியை உதிர்ப்பது போன்றதாகும். சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றால், கருவுற்ற பெண்ணின் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மிக நல்ல உணவு சாப்பிட வேண்டும். பெண்கள் கருவுற்று மூன்று மாதங்கள் ஆனவுடன், பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது வழக்கம். குங்குமப்பூ பால் சாப்பிட்டால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்பது, ஒரு பொதுவான நம்பிக்கை.
அதில் பல நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. குங்குமப்பூ என்றால் அது வெறும் பூ மட்டுமல்ல, அந்த பூவில் உள்ள மகரந்தத்தைதான், நாம் குங்குமப்பூ என, சாப்பிடுகிறோம். கர்ப்பிணிகள் இதை பாலில் கலந்து சாப்பிடும் போது, குழந்தை நன்றாக வளர்ச்சி அடையவும், சுகப்பிரசவம் ஆகவும் உதவும்.
குழந்தை சருமம் நிறமாகவும், அழகாகவும் இருக்கும். தலை பாரமாக இருந்தால் ஜதமூல கசாயம் மற்றும் சுக்குடன் குங்குமப்பூவை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகும், இந்த கசாயம் சாப்பிட்டால். கர்ப்பப்பை பலமடையும். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் ஞாபக சக்தி, குங்குமப்பூ சாப்பிடுவது மூலம் கிடைக்கும்.
அளவாக மூன்று கிராம் அளவு எடுத்து கொண்டால் போதும். கர்ப்பிணிகள் மட்டுமல்ல, மற்ற பெண்களும் சாப்பிடலாம். ஆண்கள் சாப்பிட்டால் உயிரணுக்கள் விருத்தியடைந்து வீரியம் அடையும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆலோசனை தேவைப்படுவோர், 8940991234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
