PUBLISHED ON : ஆக 07, 2021

வெப்பம், வியர்வை, எரிச்சல் என வெயில் கால பிரச்னைகளிலிருந்து, இந்த பருவமழை விடிவு தந்துள்ளது. அதே சமயம், வெயில் காலத்தில் நம் சருமத்திற்கு கொடுத்த பராமரிப்பை, மழைக்காலத்தில் கொடுக்க தவறி விடுகிறோம். மழைக்காலத்தின் போது அதிகரிக்கும் ஈரப்பதம், உங்களது சருமத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பருவத்திற்கேற்ப உங்கள் சரும பராமரிப்பையும் மாற்றுவது முக்கியம்.
சோப்பு அடிக்கடி வேண்டாம்
சோப்பு இல்லாத கிளன்சர்கள் எனப்படும், சுத்தப்படுத்திகள் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. இவை, மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை வறட்சியாக்காமல், எண்ணெய் மற்றும் அழுக்கை நீக்கும். ஒரு நாளைக்கு, 2 முதல் 3 முறைக்கு மேல் முகத்தை கழுவக்கூடாது. இது, சருமம் உலர்ந்து, வெடிப்பு ஏற்படுவற்கு வழிவகுக்கும்.
சன்ஸ்கிரீம் தொடரணும்
பெரும்பாலானோர் வெயில் காலம் முடிந்தவுடன், சன்ஸ்கிரீம் போடுவதை விட்டு விடுகின்றனர். இது மிகவும் தவறானது. மேகங்களுக்குள் சூரியன் மறைந்திருந்தாலும், சக்திமிக்க புற ஊதா கதிர்கள் சருமத்தில் எளிதில், ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
தோலுக்கு பூஞ்சை எதிர்ப்பு
மழைக்காலத்தில் அனைத்து வகையான கிருமிகள், பாக்டீரியா பாதிப்புகளுக்கு, உங்கள் சருமம் ஆளாக நேரிடும். இதை தடுக்க, பூஞ்சை எதிர்ப்பு பவுடர்களை பயன்படுத்தலாம். இயற்கை முறையில் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தில் உண்டாகும், பாக்டீரியா பாதிப்புகளை தடுக்கும்.
அளவான மேக்கப் போதும்
இயற்கை அழகு சாதன பொருட்கள் மூலம், அளவான மேக்கப் போடுங்கள். அதிக மேக்கப், சரும துளைகளை அடைத்து, உங்கள் சருமத்தை சுவாசிக்க முடியாமல் செய்யும். உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க, கிரீம் வடிவிலான 'லிப்பாம்' அல்லது பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெயை இரவில் படுக்கும் போது, உதட்டில் தடவலாம்.
போதுமான தண்ணீர் குடிங்க
கோடைக்காலத்தை போல மழை, குளிர் காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால், நாம் போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. ஈரப்பதம் மிகுந்த மழைக்காலங்களில் தேவையான அளவு தண்ணீர் பருகுவதை, உறுதி செய்து கொள்ள வேண்டும். நச்சுக்களை வெளியேற்ற, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
