PUBLISHED ON : ஜூலை 08, 2015

நம் உடலில் தொடர்ந்து, 5 லி., ரத்தம் ஓடியபடி இருக்கிறது. ரத்தம் ஓடவில்லை என்றால், உடலில் உயிர் இல்லை என்று பொருள். மகா தமனியின் வழியாக, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது; இதனால் மகா தமனி நெகிழ்வு தன்மை உடையது. இப்படி இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள், மகா தமனி (ஆர்ட்டெரி) எனப்படுகிறது. மகா தமனி, மூன்று சுற்றுச்சுவர்களை உள்ளடக்கியது.
இதயம் பாதிக்க முக்கிய காரணம், ரத்தம் கொண்டு செல்லும் மகா தமனிகளில், பிரச்னை உண்டாவதே. இதில் முதன்மையானது அடைப்பு. ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு தொடர்ந்து இருந்தால், அது மகா தமனியின் உட்சுவரில் படிந்து, அதை தடிக்க வைத்து, சுற்றளவைக் குறைத்து விடுகிறது,
அதிகமான ரத்த அழுத்தம், பிறவியிலேயே இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கோளாறுகள், மரபியல் காரணங்கள் மற்றும் கடுமையான விபத்துகளால் ஏற்படும் பெருங்காயங்களால், தமனியைச் சுற்றியுள்ள மூன்று திசுச் சுவர்களுக்கிடையில், கிழிசல் ஏற்பட்டு, இதனுள் ரத்த ஓட்டம் பாயும். இவ்வாறு கிழிசல் ஏற்பட்டால், மகா தமனி உடைந்து, நோயாளி உடனே மரணத்தை தழுவி விடுவர்.
தமனி பாதிப்பை கண்டறிந்தவுடன் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை அல்லது நுண்துளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தமனி பாதிப்பு, இதயத்திற்கு எவ்வளவு அருகே இருக்கிறது என்பதை பொறுத்து, அறுவை சிகிச்சை முறையை, மருத்துவர் தீர்மானிப்பார். 40 முதல் 60 வயதினருக்கே, இந்த மகா தமனி பாதிப்பு ஏற்படுகிறது.
முன்னெச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிவது கடினம். மாரடைப்புக்கான அறிகுறிகள் போன்றே தோன்றும். 'சி.டி., ஸ்கேன்' முடிவுகளில் மட்டுமே, இந்த நோயை உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு, குறைவாக இருக்கிறது. மேலும் இதற்கான சிகிச்சை முறையும் சற்றே கடினம் என்பதால், திறமையான மருத்துவர்களும் குறைவு.
- எம்.எம்.யூசுப்
நுண் துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
குளோபல் மருத்துவமனை, சென்னை.
82206 69911

