PUBLISHED ON : மார் 16, 2025

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது, பெருங்குடல், மலக்குடல் கேன்சர் பாதிப்பு நம் நாட்டில் சற்று குறைவு. இதற்கு காரணம், மேற்கத்திய நாடுகளை போல, 'ஸ்கிரீனிங்' எனப்படும் நோய் வருவதற்கு முன்பே பரிசோதனை செய்வது மிகவும் குறைவு.
மலத்தில் ரத்தம் கலந்து வந்தால், 'பைல்ஸ்' என்று நினைத்து அலட்சியம் செய்வது சகஜம். பயிற்சி பெறாதவர்களிடம் ஆலோசனை பெற்று, நாட்டு மருந்துகளை சாப்பிட்டு, நோய் முற்றிய நிலையிலேயே வருகின்றனர்.
பெருங்குடல், மலக்குடல் கேன்சரை பொருத்தவரை, ஆரம்ப நிலையில் இருந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். ஆண், பெண் இருவரையும் பாதிக்கும். பொதுவாக 50 வயதிற்கு மேல் தான் இந்த வகை கேன்சர் பாதிப்பு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இளம் வயதினரையும் பாதிக்கிறது.
எனவே, 50 வயதில் அனைவரும் கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அமெரிக்காவில் 45 வயதிலேயே செய்கின்றனர்.
நம் நாடு உட்பட ஆசியா முழுதும், இளம் ஆண்களுக்கு மலக்குடல் கேன்சர் பாதிப்பு சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குடும்பத்தில் யாருக்காவது கேன்சர் இருந்தால், மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, பெருங்குடல், மலக்குடலின் உட்புற சுவர்களில் அழற்சி ஏற்பட்டு இருந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் மலக்குடல் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 'பாலிப்ஸ்' எனப்படும் நுண்ணிய கட்டிகள் மலக்குடலில் உருவானால், 100 சதவீதம் கேன்சராக மாறும்.
ஆசனவாயில் ரத்தக் கசிவு, ரத்த சோகை, இயல்பாக மலம் கழிக்காமல் சிக்கல், வயிற்றுப்போக்கு என்று மாறி மாறி வருவது, காரணம் இல்லாமல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் ஆறு வாரங்களுக்கு மேல் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
பெருங்குடல், மலக்குடல் கேன்சர் வருவதற்கு இது தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் என்று பலவும் காரணமாக இருக்கலாம்.
டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்,
பெருங்குடல், மலக்குடல் கேன்சர் மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர், சென்னை73389 92222apcc@appollohospitals.com