PUBLISHED ON : ஜூலை 16, 2021

மூன்றாவது அலை கொரோனா தொற்று எப்போது வரும் என்று கணிக்க முடியாவிட்டாலும், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று பல்வேறு தரப்பினரும் கணிக்கின்றனர்.
அப்படி குழந்தைகளை பாதித்தால், 'மல்டி சிஸ்டம் இன்பிளமேட்டரி சிண்ட்ரோம்' எனப்படும், ஒரே நேரத்தில் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள் என, பல உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும். இளம் குழந்தைகளுக்கு, ரத்த நாளங்களை வீங்கச் செய்யும் இது, 'கவாசாக்கி' நோய் போன்றும் வரலாம்.
வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குடலின் உட்புறச் சுவர் தடிப்பது, சுவாச கோளாறுடன் சேர்ந்து தீவிர நிமோனியா பாதிப்பும் ஏற்படலாம்.
உடல் பருமன், ஆஸ்துமா கோளாறு, கேன்சர் நோயாளிகள், இதய கோளாறு இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் அதிகம்.
பல் உறுப்பு செயலிழப்பு
இது, வைரஸ் தொற்று குணமான பின் ஏற்படும் தொடர் விளைவு. மூன்றாவது அலையில், நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவர் என்று பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன.
முக கவசம், ஆன்லைன் வகுப்புகள், வீட்டின் உள்ளேயே இருப்பது, சக குழந்தைகளுடன் விளையாட முடியாதது, தனிமை, பெற்றோருக்கு வைரஸ் பாதிப்பு, நெருங்கிய உறவினர்கள் இறப்பு செய்தி என, பலவித அசாதாரணமான சூழலில் கடந்த ஓராண்டாக குழந்தைகள் இருக்கின்றனர்.
வெளியில் செல்ல முடியாவிட்டாலும், இருக்கிற இடத்தில் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவும், உடற்பயிற்சியும் குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாக்கும். உடல் பருமன், வழக்கமான அட்டவணைப்படி தடுப்பூசி போடாதது, தேவையான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யாமல் விடுவது, சர்க்கரை கோளாறு கட்டுக்குள் இல்லாதது, தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
தாக்கத்தை குறைக்க...
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது, குழந்தைகளுக்கு தொற்றை பரப்பாமல் இருக்க உதவும். எல்லா மருத்துவ மையங்களிலும் முழு மருத்துவ வசதியுடன் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தயாராக இருப்பது அவசியம்.
பச்சிளம் குழந்தைகள் உட்பட குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் வழக்கமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் தொற்று பாதித்து மருத்துவ சிகிச்சையில் இருந்தால், தினசரி ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்வது கட்டாயம்.
அறிகுறிகள்
இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் வலி, தோலில் தடிப்பு, வழக்கத்திற்கு மாறாக சோர்வு, அதிக இதய துடிப்பு, சுவாசிக்க சிரமம், கண்கள் சிவத்தல், உதடு, நாக்கு, கை, பாதங்கள் தடித்து சிவந்து இருப்பது, தலை கனம், மயக்கம், மூட்டுகளில் வீக்கம். அறிகுறி தெரிந்ததும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியன்,
இயக்குனர்,
சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை,
சென்னை
