PUBLISHED ON : பிப் 06, 2022

வைரஸ் தொற்று வந்துவிடுமோ என்ற பயம், கர்ப்பிணியரிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், 'டெலிவரி' தேதிக்கு முன் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து உள்ளது. 'சிசேரியன்' மூலம் குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
கர்ப்பம் தரித்த நாளிலிருந்து குழந்தை பெறும் வரை, ஒரே டாக்டரிடம் மருத்துவ ஆலோசனைக்கு செல்வது தான் நடைமுறை. நினைத்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில், வைரஸ் தொற்று வந்து விடுமோ என்ற பதற்றம் உள்ளது.
கர்ப்பத்தின் கடைசி சில வாரங்கள், கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, பனிக்குட நீரின் அளவு, சிசுவின் இதய துடிப்பு இவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், குழந்தையின் இதய துடிப்பு சீராக இருக்காது. இதனால் பிறந்தவுடன் குழந்தை அழாமல் போவது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, பல உடல் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
பச்சிளம் குழந்தைகளில் மிக குறைந்த சதவீதம் பேருக்கே பாதிப்பு உள்ளது. இது, நம் நாட்டில் மட்டும் இல்லை. சீனா, இத்தாலி போன்ற கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நாடுகளிலும் இப்படித் தான் உள்ளது. அதற்காக நாம் அலட்சியமாக இருக்கவும் கூடாது. அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ஆலோசனைக்கு வரும் அனைவருக்கும் குழந்தை பிறப்பதற்கு, 48 மணி நேரம் முன்பு வைரஸ் தொற்று பரிசோதனை செய்வது அவசியம்.
தாய்க்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், குழந்தையை தனிமைப்படுத்த வேண்டுமா, தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற சந்தேகம் இன்று வரை இருக்கிறது. தாயையும், குழந்தையையும் பிரித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை; தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது.
சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடித்து, சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். வளைகாப்பு உட்பட சில சம்பிரதாய முறைகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நலம். தடுப்பூசி போடுவதற்கு தவிர, வேறு எங்கேயும் குழந்தையை வெளியில் அழைத்து வரக் கூடாது.
நீர்ச்சத்து குறைவால் குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். காய்ச்சல் வந்தால், கொரோனாவாக இருக்குமோ என்ற பதற்றம் வரும். போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்து, ஒரு நாளுக்கு ஆறு முதல் எட்டு முறை வரை குழந்தை சிறுநீர் கழிக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அப்போது தான் போதிய அளவு தாய்ப்பால் குழந்தைக்கு கிடைக்கிறது என்று அர்த்தம்.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர், சென்னை.
98410 71435
