PUBLISHED ON : ஜூலை 26, 2015
மாதுளை பழம் மற்ற பழங்களை விட, எளிதில் ஜீரணமாகக்கூடிய பழமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழம், உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும் சக்தி கொண்டது. ஆயுர்வேத வைத்திய முறைப்படி, மாதுளையில் இருந்து தாசிமஷ்டாக் சூரணம், தாசிமாவலே என்ற மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சூரணம் பசி உணர்வை தூண்டுவதோடு, குடல் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்தாகும்.
மாதுளையின் மரம், வேர், கிளை, இலை, பூ, விதை என்று அனைத்துப்பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மாதுளம்பழம், இருதயத்திற்கு சிறந்த டானிக். இனிப்புக்கும், துவர்ப்புக்கும் இடைப்பட்ட சுவையில் உள்ள பழம் இது. வயிற்று அழற்சிக்கும்,
இருதய எரிச்சலுக்கும் இந்த பழம் மிக சிறந்த மருந்தாகும்.
மாதுளம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஈரலுக்கு தேவையான தாதுக்கள் கிடைப்பதோடு, உணவில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஏ சத்தை கெடாமல் பாதுகாக்கும். மாதுளம்பழத்தின் சாறு, ஜீரணக்கோளாறுக்கு சிறந்த மருந்தாகும். சளி மற்றும் குடல் உபாதைகள் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் பழச்சாற்றுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டால், பித்தவாந்தி குணமடையும்.
அதிக வயிற்றுப்போக்கு, பேதியால் அவதிப்படுபவர்கள், 50 மி.லி., மாதுளை சாற்றை பருகினால், உடனே குணமாகும். சிறுநீரக, சிறுநீர்ப்பை கற்களுக்கு, மாதுளை விதைகள் நல்ல மருந்தாகும். கொள்ளு கஷாயத்தில் ஒரு கரண்டி மாதுளை விதை அரைத்து கொடுத்தால், சிறுநீரக, சிறுநீர்ப்பை கற்கள் கரைந்துவிடும். மாதுளையின் தோல் பகுதியை நன்றாக உலர்த்தி, அதன் பின் பொடி செய்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து பல் துலக்கினால், ஈறுகள் வலுப்பெறும்; பற்கள் பளிச்சிடும்.

