PUBLISHED ON : ஜூலை 26, 2015
மனிதர்களுக்கு வெற்றிலை பல வகையில் மருந்தாக பயன்படுகிறது. வெற்றிலையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தை, மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி, 5 வெற்றிலையை எடுத்து அதன் பின்புறத்தில் இந்த கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.
ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால், வயிற்றுவலி நீங்கி விடும்.
வெற்றிலையைக் கசக்கி சாறு எடுத்து, சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்து, வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி குணமாகும். இரண்டு வெற்றிலையை எடுத்து, அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி, தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் தேள் விஷம் முறியும்.
சர்க்கரை நோயாளிகள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும், அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு, 500 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 150 மில்லி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு, 50 மில்லி வீதம் மூன்று வேளை, உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சருக்கு, இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை ஒரு கைப்பிடி, வேப்பிலை ஐந்து ஆகியவற்றை, கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றிய வெற்றிலையை சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன், 3 மிளகு அதே அளவு சுக்கு சேர்த்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால், இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

