நோய் தொற்றும் சீக்கிரம்... பர்சனல் சுகாதாரம்...ரொம்ப முக்கியம்!
நோய் தொற்றும் சீக்கிரம்... பர்சனல் சுகாதாரம்...ரொம்ப முக்கியம்!
PUBLISHED ON : ஆக 21, 2021

பொதுவெளியில் மாதவிடாய் குறித்து பேசுவதில், இன்னும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதனால், இளம்பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு கிடைப்பதில்லை. சில நேரங்களில், தவறான வழிநடத்தல் மற்றும் நம்பிக்கையால், அவர்களின் உடல்நலமே பாதிக்கப்படுகிறது.
தீங்கான, கெட்ட ரத்தம்
மாதவிடாய் சமயங்களில் வெளியேறும் ரத்தம், கெட்ட ரத்தம் என இன்றும் பலர் நம்புகின்றனர். நம் உடலில் கெட்ட ரத்தம் ஒன்றும் இல்லை. அதிகப்படியாக ரத்தப்போக்கு உள்ளவர்கள், 'கெட்ட ரத்தம்தானே, போனால் உடம்புக்கு நல்லது. அதிகம் போகட்டும்', என அலட்சியமாக இருப்பார்கள். இது, மிகவும் ஆபத்தான செயல். காலம் தாழ்த்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
நீண்டநேரம் பயன்படுத்தலாம்
சில பெண்கள் ரத்தப்போக்கு குறைவாக இருந்தால், நீண்ட நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும், தவறான நம்பிக்கை. நீண்ட நேரம் நாப்கினை உபயோகிக்கும் போது, பிறப்புறுப்பில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள், எரிச்சல், புண், கொப்புளங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குறைந்தது, ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை, உங்கள் நாப்கினை மாற்றுவதே சிறந்தது.
வலிநிவாரணி மாத்திரைகள்
இன்றைய இளம்பெண்கள் பலரும், வலியை தாங்க தயாராக இல்லை. அதனால், மாதவிடாய் சமயங்களில் மருத்துவரின் பரிந்துரையின்றி, வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அலோபதி மாத்திரைகளால் பக்கவிளைவுகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.இயற்கையான வீட்டு வைத்தியம் மூலம் வலியை கட்டுப்படுத்துங்கள். தாங்க முடியாத வலி என்ற நேரத்தில் மட்டும் மருத்துவரை அணுகி, மாத்திரையை பயன்படுத்தலாம். உடலுக்கு போதிய ஓய்வு கொடுங்கள்!
மூன்று நாட்களே இயல்பானது
ஒவ்வொரு பெண்ணின் உடல் செயல்பாடு, வாழ்க்கை முறைக்கேற்ப மாதவிடாய் சுழற்சி மாறுபடும். மூன்று நாட்களுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாக இருந்தால், ஏதேனும் பிரச்னை இருக்கும் என கவலைப்படாதீர்கள். சராசரியாக, மூன்று முதல் எட்டு நாள் வரை மாதவிடாய் நீடிக்கும். அதேபோல், 21 முதல் 35 நாட்கள் என, மாதவிடாய் சுழற்சி பெண்களுக்கு, பெண்கள் மாறுபடும். இந்த சராசரியை காட்டிலும், வேறுபட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
உடற்பயிற்சி, 'உணவுக்கு தடா'
இன்றும் சில வீடுகளில், மாதவிடாய் சமயங்களில், புளிப்பு மற்றும் காரமான பொருட்கள் என சில உணவுகளை, பெண்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இது போன்ற, அறிவியல் ஆதாரமற்ற செயல்களால் பெண்களுக்கு, போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. உங்களுக்கு முடியவில்லையெனில், கடின உடற்பயிற்சிகள் வேண்டாம்! லேசான உடற்பயிற்சி உங்கள் மாதவிடாய் வலியை குறைப்பதுடன்,மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்.
இன்னும் ஒதுக்கப்படும் பெண்கள்
நம்புங்கள், இந்த நவீன யுகத்திலும், மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்குவது நடக்கிறது. படித்த பெண்களும் இதை பின்பற்றுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறம் தனி குடிசையில் இருக்க வைப்பதில்லை. ஆனால், 'துவைத்த துணிகளை தொட வேண்டாம், பூக்கள் மற்றும் செடிகளை தொட வேண்டாம், சுபநிகழ்வுகளில் ஒதுக்கி வைப்பது' போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. காலம் காலமாக பின்பற்றும் இந்த சங்கிலியை பெண்களே... உங்களால் மட்டுமே உடைக்க முடியும்.
