PUBLISHED ON : ஆக 22, 2021

தினசரி கொரோனா பாதிப்பு 3 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான், ஒரு அலை முடிந்து, அடுத்த அலை துவங்கி விட்டதா, இல்லையா என சொல்ல முடியும். பாதிப்பின் அளவு 5 சதவீதத்திற்கும் மேல் செல்லும் போது, அடுத்த அலை துவங்கி விட்டது என சொல்ல முடியும்.
நம் நாட்டில் தினசரி பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கேரளாவில் 2 சதவீதம் உள்ளது. எனவே, தற்போதைய பாதிப்பை இரண்டாவது அலையின் முடிவு என புரிந்து கொள்ளலாம்.
சர்வதேச அளவில் செய்யப்பட்ட பலதரப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், வரும் அக்டோபர் மத்தியில் அல்லது இறுதியில் மூன்றாவது அலை துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவர் என்பது 99 சதவீத மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி
'ஹேர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி, தமிழகத்தில் 46 - 60 சதவீதமும்; சென்னையில் 65 - 80 சதவீதமும்; நாடு முழுதும் 45 - 60 சதவீதமும் ஏற்பட்டு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அதிக சதவீதம் பேர் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது, படிப்படியாக இது அதிகரிக்கும்.
மூன்றாவது அலையின் தாக்கம் இருக்கும் பிற நாடுகளில், 'டெல்டா, டெல்டா பிளஸ்' வகை வைரஸ்களே அதிகமாக காணப்படுகின்றன.
இந்த இரண்டும் நம் நாட்டில் இரண்டாவது அலையிலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. அடுத்த அலையில், இதை விடவும் வீரியம் குறைந்த 'லேம்டா, கப்பா' வைரஸ்கள் பரவலாம். இவை, ஏற்கனவே பரவிய நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை.
இதுவரையிலும் ஏற்பட்ட ஆறு வைரஸ் பெருந்தொற்றுகளில், முதல் சில ஆண்டுகள், வீரியம் அதிகம் இருந்து, பின் படிப்படியாக குறைந்துள்ளன. அதே போல கொரோனாவும் 2022ம் ஆண்டிற்கு பின் வீரியம் குறையும்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம், துரித உணவுகள் என நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகளைத் தவிர்த்து, சத்தான சமச்சீர் உணவை குழந்தைகளுக்குத் தர வேண்டும்.
சளி, காய்ச்சல், இருமல் பரவும் பருவம் என்பதால், காய்கறிகள், உலர் பழங்கள் அதிகம் கொடுக்க வேண்டும்.
கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் இவற்றை தற்காப்பு முறையாக வாரம் ஒரு முறை, 10 மில்லி அளவில் குடிக்கலாம்; 5 - 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உணவுப் பழக்கங்களை சரி செய்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும்.
இனிப்பு சாப்பிடக் கேட்டால் பனை வெல்லம், கருப்பட்டி சேர்த்த வேர்க்கடலை, எள் உருண்டை கொடுக்கலாம்.
டாக்டர் சதீஷ் குமார்,
சித்த மருத்துவர், சென்னை
98400 25847, 90920 85847
