PUBLISHED ON : ஜன 26, 2021

தடுப்பூசி போட்டுக் கொண்டபோது, துளி கூட வலி தெரியவில்லை. தடுப்பூசி போட்ட பின், உடனடியாக அங்கிருந்து வரக் கூடாது; டாக்டர்களின் கண்காணிப்பில் குறைந்தது, 30 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
எனக்கும் சரி, என் மனைவி டாக்டர் அதியா அகர்வாலுக்கும் எந்தவித அலர்ஜியும் இல்லை.சிலருக்கு அலர்ஜி வரலாம். அப்படி இருந்தால், 30 நிமிடங்களுக்குள் தெரிந்து விடும். உடனடியாக மாற்று மருந்து கொடுத்து சரி செய்யலாம். அதற்கு தான், அரை மணி நேரம் காத்திருக்கச் சொல்வது. 30 நிமிடங்கள் எந்த பிரச்னையும் இல்லை என்றால், அதன்பின் ஒன்றும் ஆகாது.சிலருக்கு ஊசி போட்ட இடத்தில், வலி இருந்ததாக கூறினர். முதல் ஊசி போட்டதில் இருந்து, 28 நாட்கள் கழித்து, அடுத்த டோஸ் போட வேண்டும். முதல் டோஸ் போட்டதில் இருந்து, நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாக, இந்த இடைவெளி அவசியம்.
'கோவாக்சின், கோவிஷீல்டு' என்ற இரண்டு தடுப்பு மருந்துகள் உள்ளன. முதல் டோஸ் எந்த தடுப்பு மருந்து போட்டுக் கொண்டோமோ, இரண்டாவது டோசும் அதே தடுப்பு மருந்து தான் போட வேண்டும். முதல் டோஸ் ஒரு தடுப்பு ஊசி, அடுத்த டோஸ் என, வேறு ஒன்று போடக் கூடாது.பொதுமக்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான், முதல் ஆளாக நான் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 'இனி நமக்கு தொற்று வராது' என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. இதன் பின்னும், இதுவரை நாம் பின்பற்றிய தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவுவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
டாக்டர் அமர் அகர்வால்
தலைவர்,
அகர்வால் கண் மருத்துவமனை.
94444 44822
