PUBLISHED ON : டிச 07, 2020

'குல்மம்' எனும் வயிற்றில் வாயு பந்து போல உருண்டு, பலருக்கும் வெளிப்புறம் துருத்திக் கொண்டு உபாதை ஏற்படுத்துகிறது.
உணவில் போதிய அளவு நெய், எண்ணெய் மற்றும் குடலுக்கு நெகிழ்வு தரும் உணவுப் பொருட்களை சேர்க்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறு இது.
இதனால், மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை, ரத்த சோகை, இதயம் சார்ந்த உபாதைகள், குடலில் வழுவழுப்பு இல்லாமல், வறட்சியால் மலச்சிக்கல், மூல உபாதை போன்றவை அதிகரிக்கும்.
சூடு ஆறிய நிலையில் பருப்பு, சாம்பார், உருளைக் கிழங்கு, வாழைக்காய், காராமணி, மொச்சை, வேர்க்கடலை, சுண்டல், பட்டாணி போன்றவற்றை உண்பதால், வயிற்றுப் பொருமல் ஏற்படும்.
எளிதில் செரிக்காத மைதா பொருட்கள், குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் திரவப் பொருட்கள், முதல் நாள் சமைத்து மீதமான உணவை மறுநாள் சாப்பிடுவது போன்றவற்றால் பசியின்மை, விக்கல், வாயு, கபம் ஆகியவற்றால் ஏற்படும் இதய வலி, விலாப்புற வலி, சிறுநீர் பை வலி, இடுப்பு வலி, பிறப்புறுப்பு வலி, ஆசனவாய் வலி, தொண்டையில் அடைப்பு, இதயத்தை இறுக்குவது போன்ற வலி, உணவில் வெறுப்பு, மண்ணீரல் கோளாறு, மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகள் வருகின்றன.
இவற்றை தீர்க்கும் வகையில், வாக்படர் எனும் முனிவர் இயற்றிய, 'அஷ்டாங்க ஹிருதயம்' எனும் ஆயுர்வேத நுாலில் சிகிச்சையை விளக்கி இருக்கிறார்.
காயம், கடுக்காய் தோல், புஷ்கர மூலம், வசம்பு, ஆடுதொடா பாளை வேர், கொடுவேலி உட்பட, 23 மூலிகைகளை சம அளவில் எடுத்துப் பொடித்து பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறார். இவற்றில் பல மருந்துகளின் பெயர்களை கேட்டிருக்கவே மாட்டோம்.
நாட்டு மருந்து கடையில் இவற்றை வாங்கி, துாசு நீக்கி, பொடித்து, பத்திரப்படுத்தி சாப்பிட வேண்டும். இதற்கெல்லாம் ஏது நேரம்? அதிலும், இந்த மருந்தை சாப்பிட வெந்நீர், மோர், காபி, சூடான சாதம் என்று அவரவர் குடல் அமைப்பிற்கு ஏற்ப, உணவுடன் சாப்பிட வேண்டும்.
இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.
டாக்டர் ரஞ்சனி சாய்ராம்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
94456 95771
abinaya.ranjani@gmail.com

