நோய் எதிர்ப்பு சக்தி!: தாதியைப் போன்று பாதுகாக்கும் நெல்லிக்கனி!
நோய் எதிர்ப்பு சக்தி!: தாதியைப் போன்று பாதுகாக்கும் நெல்லிக்கனி!
PUBLISHED ON : டிச 08, 2020

திருக்குறளில் மருந்து எனும் அதிகாரத்தில், நோய் எப்படி உருவாகிறது என்று அதிநுட்பமாக விளக்கியுள்ளார்:
உடம்பினுள் இயங்கும், 'நஞ்சு, அமுதம்' எனும் இரு வேறு பொருட்களில், நஞ்சு மிகுந்தாலோ, அமுதம் குறைந்தாலோ, சித்த மருத்துவ நுால்களில் குறிப்பிடப்படும் வாத, பித்த, கப நிலைகள் தன்னிலை தடுமாறி, நோய்களை உண்டாக்கும் என்கிறார்.
இதில் நஞ்சு என்பதை விஷம் என்றும், அமுதம் என்பதை, 'இம்யூனிட்டி' அதாவது, நோய் எதிர்ப்பு சக்தி எனலாம்.
எப்படி அறிவது?
உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வாழும் வீடு, உடுக்கும் உடை, குடிக்கும் தண்ணீரில் நஞ்சு இருந்தால், ரத்தம் கெட்டு, ரத்தத்தில் இயல்பாக இருக்கும் அமுதம் குறைகிறது. இந்நிலையில் பல்வேறு நோய்கள் உடம்பினுள் நுழைகின்றன என, சித்த மருத்துவம் கூறுகிறது.
இதை தடுக்கும் ஒரே வழி, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்நிலையில் வைத்திருப்பது தான்.
கோரக்கர் எனும் சித்தர், கி.பி., 7ம் நுாற்றாண்டில், சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, கொல்லி மலை, சேர்வராயன் மலைகளில் வளரும் மூலிகைகளைத் தேடிப் பயணித்து, பல்வேறு மூலிகை அனுபவங்களை கண்டறிந்ததை, 'கோரக்கர் மலைவாகடம்' எனும் நுாலில் பல பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகைகளுள் நான் முதலிடம் தருவது, நெல்லிக்கனி.
நெல்லிக்காயை, காயகல்பம் என்று போற்றுகின்றனர் வெளிநாட்டு விஞ்ஞானிகள். ரஷ்ய மருத்துவ விஞ்ஞானி, பசுமையான நெல்லிக்கனியில் உள்ள அத்தனை சத்துக்களும், உலர்ந்த நெல்லி வற்றலிலும் முழுமையாக உள்ளது என்று வியக்கிறார்.
டோனி பவுன் எனும் அறிஞர், ஒரு நெல்லிக்கனியில், 3,000 மி.கி., 'வைட்டமின் - சி' சத்து இருப்பதாக கூறுகிறார். ஹிந்தியில், இதை, 'ஆமலகி' என்பர். இதன் பொருள், 'நர்ஸ்' எனப்படும் தாதி ஆகும். ஒரு தாதியைப் போல் உடம்பைப் போஷிப்பதால், இதை ஆமலகி என்றனர்.
எனவே உணவாகவும், மருந்தாகவும் பயனாகும் நெல்லிக்கனி, 17 வித நோய்களுக்கு தீர்வு அளிப்பதாக நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* தினசரி, இரண்டு மலை நெல்லியை விதை நீக்கி, இடித்து சாறு பிழிந்து, அதில், 25 மில்லி வெந்நீர் சேர்க்கவும். பொடித்த, ஐந்து மிளகு, மூன்று சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
இதில், 100 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். தொடர்ந்து, 48 நாட்கள் செய்த பின் நிறுத்தவும். அதன் பின் ரத்தத்தை சோதித்தால், ரத்தத்தின் தன்மைகள் சிறப்பாக இருப்பதை அறியலாம்.
அதன் விளைவாக கண் பார்வை, தீட்சண்யம் பெறும்; சருமம் பொலிவு பெறும்; இதயம், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்; உறக்கம் தேவையான அளவு இருக்கும்.
மலச்சிக்கல் அறவே நீங்கும்; செரிமானம் திருப்தியாக இருக்கும்; அறிவுத்திறன் ஊக்கம் பெறும்; மூட்டுகள், காது, தொண்டை, தசை போன்றவை செழித்து, 50 வயதில் நெல்லிக்கனி சாப்பிடுபவர்களின் வயது, 60லும் அப்படியே இருக்கும். இதை அனுபவத்தில் உணரலாம்.
சித்த பிரமை உள்ளவர்களுக்கு, நெல்லிக்கனியை அரைத்து நெற்றி, கழுத்து, தலையின் மேல் பற்று போட்டு வர, படிப்படியே சித்த பிரமை விலகும்; இதை, தேர்ந்த சித்த மருத்துவர் மேற்பார்வையில் செய்வது நலம்.
நீரிழிவு நோயாளிகள், 10 முதல், 20 நெல்லி வற்றலை உடைத்து, இரவில், ஒரு குவளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். காலையில் அதை அப்படியே கொதிக்க வைத்து, ஐந்து மிளகு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வடிகட்டி, ஆறிய பின் பருகி வர, நீரிழிவும், அதன் தாக்கங்களும் படிப்படியே குறையும்.
'இதில் பக்கவிளைவு உண்டா?' என்று வழக்கம்போல் கேட்போருக்கு, என் பதில், 'கிடையாது' என்பது தான்!
தலைமுடி கறுமை நிறம் பெற்றிடவும், கண் பார்வை துல்லியமாக இருக்கவும், வாயில் புண் வராமலிருக்கவும், கழுத்து, மார்பு, வயிறு பகுதி பொலிவாக இருக்கவும், நீரிழிவு, ஆஸ்துமா, தைராய்டு, வயிற்றில் புண், மூட்டுகளில் வலி, எலும்பு வலிமைக்கும், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவும், புற்று நோயை தடுக்கவும்-, மேலும் பல நோய்களுக்கும் தீர்வு தரக்கூடிய நெல்லிக்கனியை, 'சர்வரோக நிவாரணி' எனலாம்.
மூலிகைமணி டாக்டர் க.வேங்கடேசன்,
சித்த மருத்துவர், சென்னை.
73388 23784

