இருமும் போது ரத்தம் வருகிறதா... அலட்சியப்படுத்த வேண்டாம்...
இருமும் போது ரத்தம் வருகிறதா... அலட்சியப்படுத்த வேண்டாம்...
PUBLISHED ON : ஆக 12, 2018

என் அப்பாவிற்கு காசநோய் உள்ளது. நான் கர்ப்பமாக இருக்கிறேன். என் அப்பாவை பார்க்க செல்லலாமா? என்னை நோய் தொற்றுமா; வயிற்றில் வளரும் கருவை பாதிக்குமா?
பொதுவாக காசநோய் உள்ளவர்கள் இருமும் போது காற்றில் பரவி சுற்றியுள்ளவர்களை தொற்றும் வாய்ப்பு உள்ளது. அம்மாவிற்கு சளி பரிசோதனை செய்து, அதன் முடிவு 'பாசிட்டீவ்' என வந்தால், நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. இரு மாதங்களுக்கு விடாமல் மருந்து உட்கொண்டிருந்தால் நோய்க்கிருமி பரவும் வாய்ப்பில்லை. இருப்பினும் வீட்டில் ஒரே அறையில் தங்குவது மற்றும் 'ஏசி'யில் உறங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நலம். அவர்கள் இருமும் போது வாயில் துணியை வைத்து மூடி கொண்டு இரும வேண்டும். பரிசோதனை முடிவில் 'நெகடீவ்' என வந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நுரையீரல் தவிர வேறு இடத்தில் காசநோய் இருந்தாலும் பயப்பட தேவையில்லை.
நான் இருமும் போது ரத்தம் வருகிறது. எதனால்?
நுரையீரலில் உள்ள பல பிரச்னைகளுக்கு நாம் இருமும் போது ரத்தம் வரும். இந்தியாவில் அதிகமாக நுரையீரலில் காசநோய் உள்ளவர்களுக்கு இருமும் போது ரத்தம் வருகிறது. நுரையீரல் புற்றுநோய், காசநோய் தழும்பு, தழும்பு உள்ள இடத்தில் பூஞ்சை வளருதல், மூச்சுக்குழாய் விரிவடைதல், 'கனைக்டீவ் டிஸ்யு டிஸ்சார்டர்' (CONNECTIVE TISSUE DISORDER) போன்ற பல காரணங்களாலும் ரத்தம் வரும். எனவே, இருமும் போது ரத்தம் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனே டாக்டரை சந்தித்து காரணத்தை அறிந்து அதற்கு முறையான சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
என் நண்பனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. அவனுக்கு சிறுநீர் பையில் புற்றுநோய் வந்தது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர் பையில் புற்றுநோய் வருமா?
ஆம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர் பையிலும் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது. புகைப்பிடிக்கும் போது நாம் உள்ளே இழுக்கும் புகை தொண்டை வழியாக நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து, அதன் வழியாக சிறுநீர் பைக்குள் செல்லும். அதன் மூலம் புற்றுநோய் வரும். மேலும் புகை செல்லும் பாதைகளில் உள்ள தொண்டை, நுரையீரல், வயிறு, குடல் ஆகிய இடங்களிலும் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது. புகைப்பழக்கம் உயிருக்கு கேடு விளைவிக்கும கொடிய பழக்கம். அதை நிறுத்துவது நல்லது.
என் சகோதரருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் இளைப்பு வந்து டாக்டரை சந்தித்து 'இன்கேலர்' (சுவாசக்கருவி) ஆரம்பித்தோம். அதே மருந்தை ஐந்து ஆண்டுகளாக எடுத்து கொண்டிருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லை. டாக்டர் ஆலோசனையின்றி, அதே மருந்தை எடுத்து கொள்ளலாமா? அது சரியா?
இல்லை, உங்கள் சகோதரர் செய்வது முற்றிலும் தவறு. நமக்கு நோய் தீவிரமாக இருக்கும்போது டாக்டரை ஆலோசிக்க வேண்டும். டாக்டர் நோயின் தீவிரத்துக்கு தகுந்தாற்போல் மருந்து கொடுப்பார்.
நோயும் குணமாகும். அதே மருந்தை, அதே அளவில் நாம் உட்கொள்வது தவறான செயல், நோயின் தீவிரம் குறைந்த பின் டாக்டரை மீண்டும் சந்தித்து, அவர் கூறும் அளவிற்கு மருந்தின் அளவை மாற்ற வேண்டும். மருந்தின் அளவு எடுக்கும் நேரம், நம் உடல் நிலைக்கு எந்த மருந்து சரியானது இவை அனைத்தும் டாக்டருக்கு மட்டுமே தெரியும். எனவே சகோதரர் டாக்டரை சந்தித்து, அவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்வது நல்லது.
- டாக்டர் மா.பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர் மதுரை
94425 24147
