PUBLISHED ON : மார் 29, 2015

மண் நனைய, கோடை மழை எப்போது வரும் என, அண்ணாந்து பார்க்கும் வெயில் காலம் வந்தாச்சு. உடல் சூட்டை தணிக்க ஏதேனும் வழி உள்ளதா? ஒரே தீர்வு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவதுதான். எந்தெந்த நாட்கள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதனால், ஏற்படும் பயன்கள் என்ன?
* ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல், சரும பாதுகாப்புக்கு சிறந்த சிகிச்சை. தோலுக்கும் பதமானது. எண்ணெய் குளியலுக்கு ஏற்ற எண்ணெய், நல்லெண்ணெய் தான். அதை சிறிது சூடாக்கி, முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும், மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும், இரண்டு சொட்டு எண்ணெய் விட வேண்டும்.
* சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்பே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெய்யின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில், 20 நிமிடம் உடல் காய நிற்க வேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு,
எண்ணெய் போக குளிக்க வேண்டும். சுடுதண்ணீரை உடம்பில் ஊற்றும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமாக, வெளியேறத் தொடங்கும். இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை,
அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்க வேண்டும்.
* இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகள் வலுப்பெறும். எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்த்தால் சரியாகும். நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கிறது. சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
* மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதை கொண்டு குளிக்க வேண்டும். அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும்; நல்ல தூக்கம் வரும்.
மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். முடி கொட்டுபவர்கள் தலையை அரக்கித் தேய்த்தால், முடி உதிர்தலை அது மேலும் அதிகரிக்கச் செய்யும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைத்தால், எண்ணெயின் வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதும்.
