PUBLISHED ON : ஜூன் 07, 2015

எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால், அலங்காரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. ஆனால், பெண்கள், தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகம் மெனக்கெடுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அழகுப்படுத்தினால் தொந்தரவு இல்லை. அதுவே செயற்கைக்கு மாறி விட்டால், சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு துவங்கி, பாத நகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை, பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள் பல ஆபத்தாவை என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக, 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றன. அதில், சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், கண் எரிச்சல் மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
தலைக்குப் போடும் ஸ்பிரேயில், 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில், ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.
கண் அழகு சாதனங்கள், கண்களுக்கு எவ்வித அழகு சாதனப்பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில், ஐ ஷேடோவில், 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இது, புற்றுநோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்தும்.
கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ், 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள்
போன்றவை ஏற்படும். முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள்
ஏற்படக்கூடும்.
ரசாயனங்களால், தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்கு பதில், இயற்கையான அழகு பொருட்களை உபயோகப்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

