PUBLISHED ON : நவ 14, 2021

'டெங்கு' காய்ச்சல் பரவும் காலம் இது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், டெங்குவை உறுதி செய்யும் ரத்தப் பரிசோதனை செய்து, பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே, சிகிச்சையை துவங்கி விடலாம்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ் ஏஜிப்டி' என்ற பெண் கொசுக்கள், அதிகாலை, பின் மாலைப்பொழுதில் கடிக்க கூடியவை.
டெங்கு வைரசில், டென் - 1, டென் - 2, டென் - 3, டென் - 4, டென் - 6 என்ற ஐந்து வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், வெவ்வேறு விதமான 'ஆன்டி ஏஜன்ட்' எனப்படும் நோய் கிருமிகளை உருவாக்கக் கூடியவை.
டெங்கு வைரஸ் பாதித்த நோயாளியை, கொசு கடித்தாலே, கொசுவினுடைய உணவுக்குழாயில் வைரஸ் தங்கி விடும். எட்டு - 10 நாட்களுக்கு பின், கொசுவின் உமிழ்நீரில் தங்கும். வைரசை சுமந்து திரியும் இக்கொசுக்கள் கடிக்கும் போது, அவற்றின் உமிழ்நீரின் வழியே நம் ரத்தத்தில் கலந்து, பாதிப்பை உண்டாக்கும்.
அறிகுறிகள்
வைரஸ் உடலினுள் சென்ற மூன்று - 14 நாட்களுக்கு பின் காய்ச்சல் வரும்; தலையின் முன் பக்கம், கண்களுக்கு பின் பக்கங்களில் தீவிர வலி, உடல் வலி, மூட்டுகளில் வலி ஏற்படும். மிக தீவிர அறிகுறிகளான, தோலில் இளஞ்சிவப்பு நிறத் திட்டுக்கள், ரத்தம் கசிவது, ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற அறிகுறிகள் தெரியும். தீவிர அறிகுறிகள் வந்த மூன்று - ஐந்து நாட்களுக்கு பின், கை, கால்கள், முகத்தில் பரவும்.
டெங்கு பாதித்தவருக்கு வாந்தி, பசியின்மை உண்டாகும். இந்த அறிகுறிகள், ஒரு வாரத்திற்கு இருக்கலாம். அடுத்த சில நாட்களும் இவை தொடரலாம்.
முதல் தடவையாக டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு, அவ்வளவாக அறிகுறிகள் வெளியில் தெரியாது. மிதமான காய்ச்சலுடன் சரியாகி விடும். அதே குழந்தைக்கு இரண்டாவது முறையாக டெங்கு பாதித்தால், தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
நோயாளியின் உடலில் நீர் வற்றி விடுவது, தோல் குளிர்ந்து, வறட்சியாவது, நாடித்துடிப்பு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது போன்ற அறிகுறிகள் இருந்தால், மிகவும் ஆபத்தான நிலை.
தோலில் ரத்தக்கசிவு, மூக்கில் ரத்தம் வடிவது, ஈறுகளில் ரத்தக்கசிவு, சிறுநீர், மலம், பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிவது, ரத்த வாந்தி முதலியவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள்.
சிகிச்சை
டெங்கு பாதிப்பிற்கு பிரத்யேக சிகிச்சை முறைகள் எதுவும் கிடையாது. காய்ச்சலை குறைக்க பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் கொடுக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, திரவ உணவுகளை அடிக்கடி பருக வேண்டும்.
ஒருமுறை டெங்கு பாதித்தால், மீண்டும் வராது என்பது தவறான அபிப்ராயம்.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல மருத்துவர்,
கோவை.
