PUBLISHED ON : நவ 07, 2021

இருபது வயதில் இருந்து, 86 வயது வரை, எல்லா வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சி இன்மை, அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் என்று மாரடைப்பு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதீத மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளது.
என்ன செய்யலாம்?
நம்முடைய வாழ்க்கை முறையே அப்படி ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டாம். ஒருவர் மீது அதீத கோபம் இருந்தால் எப்படி நடந்து கொள்வோம்? சத்தமாக, உணர்ச்சி வசப்பட்டு பேசுவோம்... அந்த நேரத்தில் 'அட்ரினலின்' என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து, இதயத் துடிப்பு அதிகமாகி, வேகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.
பதற்றம், அதிக மன அழுத்தம் இருந்தாலும் அப்படித் தான். அதற்காக கோபமே படாமல், உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க முடியுமா? என்று கேட்டால், முடியாது தான். அறையை தாள் போட்டு, என்ன பாஷையில் வேண்டுமானாலும், யார் மீது கோபமோ, அவரை உங்கள் விருப்பப்படி திட்டுங்கள். அடக்கி வைத்த எதிர்மறை உணர்வுகள் எல்லாம் கொட்டிய பின், அமைதியாக வெளியில் வந்து, அடுத்த வேலையை பாருங்கள்.
நிறைவேறாத ஆசை, நாம் செய்யாத தவறுக்கு நம் மீது குற்றம் சொல்வது, இந்த இரண்டும் தான் வெறுப்பாக மனதில் தேங்கி, கோபமாகி, மன அழுத்தத்தில் கொண்டு விடுகிறது. உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக ஏன், எதற்கு என்று யோசிக்க பழகினால், எந்த பிரச்னையும் வராது.
ஆதாரம்: பிரிட்டீஷ்
கார்டியாலஜி சொசைட்டி
