PUBLISHED ON : நவ 07, 2021

மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அப்பகுதி மூளை செயல்திறனை இழந்து விடுகிறது. உடலின் எந்தப் பகுதியை, ரத்த ஓட்டம் தடைபட்ட மூளை பகுதி கட்டுப்படுத்துமோ, அந்த உறுப்பும் செயல்திறனை இழக்கிறது.
மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது, ரத்த குழாய்கள் வெடித்து ரத்தப்போக்கு ஏற்படுவது, இதயம் சரியாக 'பம்ப்' செய்யாதது, மூளையில் இருந்து வடியும் கெட்ட ரத்தம் அடைபட்டு போவதால், இயல்பான ரத்த ஓட்டத்தை மூளை இழந்து, மூளை செல்கள் செயலற்று போகும்; இறந்தும் போகலாம்.
ரத்தக் குழாய் அடைப்புகளால் தான் பொதுவாக பக்கவாதம் ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை செய்தால், ரத்த நாள அடைப்பை அகற்றினால், மூளையை முற்றிலுமாக அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம். நோயாளிக்கு ஏற்படும் நிரந்தர ஊனத்தையும் தவிர்க்கலாம்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள்
பேச்சு குழறுதல், பாதி முகம் கோணிப் போதல், கையின் பிடிப்பு ஆற்றல் குறைதல், நடக்கும் போது இடறுதல், ஒரு பாதி உடல் மரத்துப் போதல், திடீரென்று ஒரு கண்ணில் பார்வை குறைதல், இரண்டிரண்டாகப் பிம்பங்கள் தெரிவது, மயக்கம், நடக்கும் போது தள்ளாடுவது ஆகியவை.
இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றால், நோயாளியை ஆபத்தில் இருந்து முற்றிலும் காப்பாற்ற முடியும். பக்கவாத அறிகுறிகள் தெரிந்த உடன் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அணுகுவது முக்கியம்.
தாமதித்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு, மூளை செல்கள் செயல் இழந்து, நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மூளையில் தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீராக்க, தேவையான சிகிச்சையை உடனே செய்ய வேண்டும். ரத்த உறைவு, ரத்தக் கட்டி இருந்தால் அதையும் கரைக்க மருந்துகள் தர வேண்டியது அவசியம்.கரைக்க முடியாத நிலையில், ரத்த குழாயினுள் நுண்ணிய குழாயை செலுத்தி கட்டியை கரைக்கும் சிகிக்சையும் செய்ய வேண்டியிருக்கும்.
காரணிகள்
உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறு, இதயக் நோய்கள், கொழுப்பு, ஒவ்வாமை, ரத்த அணுக்களில் மாற்றம், மது, சிகரெட், போதை பழக்கம் போன்றவை.
கடந்த மூன்று மாதத்தில் பக்கவாதம் பாதித்து அரசு ஓமந்துாரார் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தவர்கள் முழுமையாக குணம் பெற்று சென்றுள்ளனர். இவர்கள் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே. மீதி 90 சதவீதம் பேர் தாமதமாக வந்ததால், தீவிர விளைவுகளால் பாதிப்புக்கு உள்ளாயினர்.
டாக்டர் ஆர்.எம்.பூபதி,
நரம்பியல் துறை,
ஓமந்துாரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை, சென்னை.

