PUBLISHED ON : ஜூலை 13, 2016

ஜூன் 9, 2016: சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி, திருமணத்திற்குப் பின் கணவர் சுரேஷ் உடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். ஆர்த்தி கர்ப்பம் தரித்தபோது, கணவரால், அலுவலக வேலையோடு, மனைவியை சரியாக கவனிக்க முடியவில்லை என்பதால், சென்னையில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்து விட்டார், ஆர்த்தி. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவ நாளன்று சுரேஷும், சென்னை வந்தார். குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மாதத்தில் மறுபடியும் லண்டன் செல்ல வேண்டும். எனவே குழந்தையை தொட்டிலில் போட்டு, பெயர் வைக்கும் வைபவத்தை இரண்டே வாரத்தில் நடத்த முடிவு செய்தனர். கொண்டாட்டத்தின் போது விருந்தினர்கள், நண்பர்களை அழைத்திருந்தனர். வந்த விருந்தாளிகள் எல்லாம் குழந்தையை
துாக்கி கொஞ்சினர். குழந்தைக்கு பிரசன்னா என்று பெயர் வைத்தனர். கொண்டாட்டம் முடிந்து, இரண்டு நாட்களில், குழந்தைக்கு லேசாக காய்ச்சல் கண்டது, அதோடு இருமல், சளி வேறு இருந்ததால், என்னிடம் வந்தனர். விருந்தினர் யாரோ ஒருவரிடம் இருந்த நோய்த் தொற்று குழந்தைக்கு பரவியிருக்கிறது. குழந்தைக்கு தேவையான மருந்துகள் கொடுத்தேன். இது சாதாரண பிரச்னை தான். ஆனால் தீவிரமாகவும் வாய்ப்புண்டு. அதனால் குழந்தை பிறந்து குறைந்தது, இரண்டு மாதங்களுக்கு பின், இது போன்ற கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்கு, வீட்டில் உள்ளவர்கள் மட்டும் குழந்தையைத் துாக்குவது பாதுகாப்பானது. அவர்களும் குழந்தையை துாக்குவதற்கு முன், கைகளை சுத்தமாக கழுவி, ஈரத்தை துடைத்தபின் துாக்க வேண்டும். வழக்கம்போல தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, சாதாரணமாக, 36.5 முதல் 37டிகிரி செல்சியஸாக இருக்கும் குழந்தையின் உடல் சூடு, 38 டிகிரிக்கு மேல் அதிகரிப்பது, வேகமாக மூச்சு வாங்குவது, இருமல், சளி இருப்பது நோய்த் தொற்றின் அறிகுறிகள். எனவே, உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. தாய்க்கு சளி, இருமல் இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.
ச.மணிகண்டன்
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு நிபுணர்.
சென்னை.
mani.manigandan@gmail.com
