PUBLISHED ON : ஜன 21, 2015

இந்தியாவில் 'பாஸ்ட் புட்' எனப்படும், 'துரித உணவு' கலாசாரம் பெருகி விட்டது. காய்கறிகள், 'சிப்ஸ்'களாகவும், கோழிக்கறி 'சிக்கன் கபாப்'களாகவும் மாறிவிட்டன. இவற்றை, மாதம் ஒருமுறை சாப்பிட்டாலும், தொடர்ந்து சாப்பிடுவதற்கு இணையான விளைவுகள்தான் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். ஏன் துரித உணவுகளை சாப்பிடக் கூடாது; மீறி சாப்பிட்டால், எம்மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்?
பொதுவாக, பர்கர், சிக்கன் கபாப், பிரென்ச் ப்ரை உள்ளிட்ட துரித உணவுகளில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றால், உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்னை ஏற்படும். இதோடு, ரத்த அழுத்தமும், காது கேளாமையும் ஏற்படும்.
துரித உணவுகளால், தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட, 110 முதல் 180 கலோரிகளை, சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால், 10 ஆண்டுகளில், இருபத்தைந்து கிலோ வரை, இவர்களின் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை, 15 சதவீத குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 சதவீதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளோடு நாம் பயணப்பட்டதுதான்! 2013 - 14ல், இந்திய அரசின் சோதனைக்கூடங்களில், துரித உணவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, '40 சதவீத துரித உணவுகள் தரமற்றவை' என்றும், 'அவற்றை தொடர்ந்து சாப்பிடக் கூடாது' என்றும், உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
- மா. வெங்கடேசன்,
உடல் பருமன்
அறுவை சிகிச்சை நிபுணர்

