PUBLISHED ON : ஜூலை 17, 2022

சர்க்கரை கோளாறால் பல சிக்கல்கள் உடலில் ஏற்படுகின்றன. கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பித்தப்பை என்று உடலில் எல்லா உறுப்புகளும், கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கால்களில் ஏற்படும் பாதிப்பு பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.
சர்க்கரை கோளாறுக்கு சிகிச்சை செய்யும் சிறப்பு மையங்களில், மற்ற பாதிப்பால் வருபவர்கள் 50 சதவீதம் என்றால், மீதி 50 சதவீதம் பேர் கால்களில் ஏற்படும், 'நியூரோபதி' பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களாக இருப்பர்.
கால்கள் பாதிப்புக்கு காரணம்
கால்களில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபடுவதால் உணர்ச்சி குறைவது நியூரோபதி. தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை கோளாறு இருந்தால், நியூரோபதி வரும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பது தான் கேள்வி. 10 - 20 சதவீத பாதிப்பு இருந்தால், பிரச்னை இல்லை; சிகிச்சை கொடுத்து சரி செய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் போனால், கால் மரக்கட்டை போல தான் இருக்கும்; கால் அசைத்தாலும், அசைவை உணர முடியாது.
செருப்பு காலில் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியாது. காலும், உடம்பும் விவாகரத்து செய்த மாதிரி, ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் போகும். இந்த நிலையில், எந்தவித உணர்ச்சியும் கால்களில் இருக்காது; கல் குத்தினால் தெரியாது; ஆணி குத்தினாலும், சீழ் பிடிக்கும் வரை உணர்ச்சியே இருக்காது.
பலருக்கு, ஆணி, முள், கண்ணாடி துண்டு குத்தி, பல நாட்கள் காலின் உள்ளேயே இருக்கும்; ஆனால் உணர்ச்சியே இருக்காது. இந்த நிலை அதீத ஆபத்தானது. சில வழிபாட்டு தலங்களில் நுழைவு இடத்தில் இருந்து, வழிபாடு செய்யும் இடத்திற்கு சில நிமிடங்கள் கல், சிமென்ட் தரையில் நடக்க வேண்டியிருக்கும்.
நாமெல்லாம் சூடு தாங்காமல் ஒரே ஓட்டமாக ஓடிவிடுவோம்; ஆனால், டயாபடிக் நியூரோபதி இருந்தால், உணர்ச்சியே இல்லாமல் மெதுவாக நடப்பர். வாகனம் ஓட்டும் போது, 'சைலன்சர், ஆக்சிலேட்டர், பிரேக்'கில் உள்ள சூடுபட்டு, தோல் கருகியதே தெரியாமல் வந்தவர்களும் உண்டு.
சர்க்கரை கோளாறு என்று முடிவானதும், கால் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தனித்தனி செருப்பு போட்டுக் கொள்வது நல்லது. வீட்டின் உள்ளே நமக்கே தெரியாமல், கூர்மையான பொருட்கள் ஏதாவது தரையில் கிடக்கலாம்; தெரியாமல் மிதித்தால் பாதிப்பு.
'டயாபடிக் புட்' இருந்தால், சபரிமலை போவதும் 'ரிஸ்க்' தான். சபரிமலை போகும் பக்தர்களிடமும், ஷூ போட முடியாவிட்டாலும், வெறுங்காலில் நடக்காமல், 'சாக்ஸ்' போடச் சொல்வதுண்டு.
உடம்பில் மற்ற நரம்புகளை விட நீளமானது கால் நரம்புகள். உடல் பாரத்தை தாங்குவது, பூமியுடன் தொடர்பிலேயே இருப்பதால், கால்களுக்கு பாதிப்பு அதிகம். மழைக் காலத்தில் கால்களில் லேசான கீறல், புண் இருந்தாலே, அதன் வழியாக கிருமிகள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். வறண்ட தோல் வெடிப்பு, சேற்றுப்புண், வெடிப்பாலும் கால்கள் பாதிக்கப்படும்.
கறுப்பு பூஞ்சை மண்ணிலேயே இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையின் போது, கட்டுப்பாடில்லா சர்க்கரை கோளாறு இருந்தவர்களுக்கே, 95 சதவீதம் வந்தது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், புண், காயம் வந்தால் ஆறாது; கால்கள் கறுப்பாகி விடும். பல நேரங்களில் செயலிழந்து, கால் விரல்களை அகற்றி விடும் நிலையும் வரலாம். ஆனால், 80 சதவீதம் பேருக்கு நியூரோபதி தான் வரும். 'கேங்கிரின்' கறுப்பாகி விடும்.
'ஆன்டிபயாடிக்'
இரண்டாவது அலையின் போது, கொரோனாவுக்கு பயந்து, பரிசோதனைக்கே பலர் வரவில்லை. இதனால் பிரச்னை பெரிதாகி, கால்களை இழந்தவர்களும் உண்டு; உயிரிழப்பும் இருந்தது.
சிறுநீரக தொற்று என்றால், மூன்று நாட்கள் 'ஆன்டிபயாடிக்' மருந்து கொடுத்தால், தொற்று கட்டுக்குள் வந்து விடும். கண்புரைக்கு ஒரு நாள் இருந்தால் போதும். 'ஹார்ட் அட்டாக்' வந்தால், நான்கைந்து நாட்கள் உள் நோயாளியாக இருக்க வேண்டி இருக்கலாம்.
டயாபடிக் புட் வந்தால், சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் வரை உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும்; செலவு, நேரம் எல்லாம் அதிகம். எனவே, கால்களை மிக கவனமாக பராமரிக்க வேண்டும்.
டாக்டர் வி.மோகன்
சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர்,
சென்னை
