PUBLISHED ON : மே 21, 2017
உணவு உண்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் என முன்னோர் அறிவுரை கூறிச் சென்றதன் பின்னணியில் அறிவியல் பூர்வமான தகவல்கள் அடங்கியுள்ளன. சிலருக்குச் சாப்பிட்டு முடித்ததும் சிகரெட் பிடித்தால்தான் சாப்பிட்டதன் திருப்தியையே உணர முடிவதாக நினைக்கின்றனர்; புகைப்பதே தவறு.
அதிலும் சாப்பிட்ட உடனே புகைப்பது, ஒரே நேரத்தில், 10 சிகரெட் பிடிப்பதற்குச் சமம். எப்போதுமே குளித்த பிறகு சாப்பிடுவதுதான் சிறந்தது. சாப்பிட்டதும் குளிப்பதன் மூலம் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் ஓய்வில்லாத தன்மையை உணரும். உணவுக்குப் பிறகு ஐஸ்கீரிம் சாப்பிடும்போது, ரத்தச்சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.
எல்லா விருந்துகளிலும் சாப்பாட்டுடன் பழங்களைப் பரிமாறுவது பேஷனாக உள்ளது. வீடுகளிலும் சாப்பாட்டுடன் பழம் சாப்பிடுகிற பழக்கம் பலருக்கு
இருக்கிறது. பழங்களை சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாகவோ, சாப்பிட்ட, 45 நிமிடத்திற்கு பிறகோதான் உண்ண வேண்டும். சாப்பிட்ட உடனேயே பழங்களையும் உண்பது நெஞ்செரிச்சல், ஏப்பம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
சாப்பாட்டுக்கும் துாக்கத்துக்கும் இடையே குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே துாங்கச் செல்வது செரிமானக் கோளாறை ஏற்படுத்தி, ஒருவித அசவுகரியத்தை தரும்; பருமனுக்கு வழிவகுக்கும்.
விருந்துக்கு பின் காபி, டீ, குளிர்பானங்கள் குடிப்பதால் உணவின் மூலம் உடலுக்குள் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது தடுக்கப்படும். ஆகவே, உணவுக்கு பின் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து, அதன்படி நடப்பதே அனைவருக்கும் நன்மை தரும்.

