PUBLISHED ON : மே 21, 2017
யுனானி, ஆயுர்வேதம் , சித்த மருத்துவம் ஆகியவற்றில், பேரீச்சம் பழம், முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் என, ஏராளமான சத்துகள் நிரம்பியுள்ளன. பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்தாக உள்ளது. வைட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளதால், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தேனில், பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்; பார்வை கோளாறுகளை நீக்கும்.
உடல் இளைத்தவர்கள் தொடர்ந்து உட்கொண்டால், மெலிந்த உடல் தேறும். பேரீச்சம் பழத்தை, சிறு துண்டுகளாக நறுக்கி, காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து கலந்து, தேன், ஏலக்காய், குங்குமப்பூ இதழ் சேர்ந்து கலந்து பருகலாம். சிறுவர்களுக்கு, இது சத்துள்ள டானிக். இரவில் படுக்க செல்லும் முன், ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தையும் உண்டு வந்தால், உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாக இருக்கும். தொற்று நோய் கிருமிகள், விரைவில் அண்டாது. பல் சம்பந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
பெண்களுக்கு நல்லது: பெண்களுக்கு, அதிக கால்சியம் சத்தும், இரும்புச்சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால், இத்தகைய சத்துகள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், முறையற்ற மாதவிலக்கை ஒழுங்குப்படுத்தவும், பேரீச்சம் பழம் மருந்தாகிறது.
பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும் போது, கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதை சரி செய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து, பாலையும், பழத்தையும் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். பாலில் போட்டு காய்ச்சி ஆறிய பின், சாப்பிட்டு வர, சளி, இருமல் குணமாகும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவோர், பேரீச்சம் பழத்துடன், பாதாம் சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்; கைகால் தளர்ச்சி குணமாகும். ரத்தத்தை சுத்தப்படுத்தி, எலும்புகளை பலப்
படுத்தும். இளைப்பு நோயை குணப்படுத்தும். பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
சக்தி கொடுக்கும்: 100 கிராம் பேரீட்சையில், 0.90 மி.கி., இரும்பு சத்து உள்ளது. இது, ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதில் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது, குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது.
பித்தத்தை போக்கி, தாகத்தை தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின்மை பிரச்னைக்கு, இது நல்ல நிவாரணி. வளரும் குழந்தைகளுக்கும், இளம்பெண்களுக்கும் நல்லது. கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வதால், இரும்பு சத்தை எளிதாக பெறலாம். பேறுகால பிரச்னைகளை தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு இயற்கை மருந்தாக விளங்குகிறது.
எளிதாக ஜீரணமாகும் மற்றும் ஒற்றை சர்க்கரைகள் நிறைந்ததால், புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. இதனால் தான், விரதத்தை நிறைவு செய்பவர்கள், இதை எடுத்துக் கொள்கிறார்கள்.

