தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஒரே நபருக்கு இரண்டு வைரஸ் தொற்று ஏற்படுமா?

ஒரே நபருக்கு இரண்டு வைரஸ் தொற்று ஏற்படுமா?

ஒரே நபருக்கு இரண்டு வைரஸ் தொற்று ஏற்படுமா?


PUBLISHED ON : ஆக 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த ஆறு மாதங்களாக, கொரோனா வைரஸ் தொற்று பற்றியே பேசியபடி இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் இந்த பருவத்தில் வரும், 'டெங்கு' காய்ச்சல் பரவ ஆரம்பித்து விட்டது. இரண்டுமே வைரஸ் கிருமி தான் என்றாலும், 'ஏடிஸ் ஏஜிப்டி' வகை பெண் கொசுக்களால் பரவுவது டெங்கு; மனிதர்கள் மூலம் மனிதருக்கு காற்றின் வழியே பரவுகிறது, கொரோனா.

டெங்கு அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிறு வலி, தடிப்புகள் ஏற்படும். முதல் சில நாட்கள் காய்ச்சல் இருந்து, எதிர்பாராத விதமாக காய்ச்சல் சரியாகி விடும்.

காய்ச்சல் சரியாகி விட்டது என்று நினைக்கும் போது, அடுத்த நாள் மீண்டும் காய்ச்சல் வரும். சில நாட்களில், இரண்டாவது முறை காய்ச்சல் வரும் போது, உடலுக்குள் உள்ள சளி போன்ற, 'மியுக்கஸ்' சவ்வில் நீர் கோர்க்க ஆரம்பிக்கும்; அந்த நேரத்தில் தான், மூச்சு வாங்க ஆரம்பிக்கும்.

ஆனால், கொரோனா தொற்றில், வைரஸ், நுரையீரலில் சென்று தங்கியவுடன், மூச்சுத் திணறல் வந்து விடும். அதே நேரத்தில், காய்ச்சல், அலுப்பு, இருமல், தொண்டையில் வறட்சி போன்றவை ஏற்படும்.

கவனிக்கத் தவறினால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட உடனேயே, சிலருக்கு மூச்சு வாங்குவது தீவிரமாக உள்ளது. கொரோனாவை போலவே, டெங்கு காய்ச்சலுக்கும் மருந்து கிடையாது; 'சப்போர்ட்டிவ் கேர்' மட்டுமே தர முடியும்.

டெங்கு வைரஸ் பாதித்த ஒருவர் கடித்த கொசுவிடம், வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அதே கொசு, வேறு ஒருவரை கடிக்கும் போது, கடிபடும் நபரின் உடலில், வைரஸ் தொற்று சென்று விடும். இதன் பாதிப்பு வெளியில் தெரிய, ஏழு - 10 நாட்கள் வரை ஆகும்.

வாய்ப்பு உள்ளது

இந்த நாட்களில், ரத்த அழுத்தம் குறையும்; நீர் சத்து குறையலாம்; தட்டணுக்கள் குறைந்து, ரத்தக் கசிவு ஏற்படலாம். ரத்தத்தை உறைய வைப்பது தட்டணுக்களின் தன்மை. டெங்கு பாதிப்பின் போது, தட்டணுக்கள் குறைவதால், தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அபாயமான நிலைக்கும் செல்லலாம்.

ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், 2.5 லட்சம் தட்டணுக்கள் இருக்க வேண்டும். இது, 10 ஆயிரத்திற்கு கீழ் குறையும் போது, தட்டணுக்கள் ஏற்றலாம். ஆனாலும், டெங்கு வைரஸ், தட்டணுக்களை அழிக்கும் தன்மை கொண்டதால், முழுவதுமாக அழித்தால் மட்டுமே, தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தோலின் மேல்புறத்தில், இளஞ்சிவப்பு நிற புள்ளிகள் வருவது, ஆரம்ப கட்ட அறிகுறி. இந்த நிலையில் இருந்தால், நிச்சயம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பில், ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து விடும்; ஆனால், டெங்குவில் ரத்தம் கசியும். இரண்டிலுமே, முடிந்த அளவு திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒரு வைரஸ் பாதித்த நபருக்கு, இன்னொரு வைரசும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. டெங்கு, கொரோனா இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு வந்தால், அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இப்போது சொல்ல முடியாது; ஆய்வுகள் நடக்கின்றன.

டெங்கு பரவ துவங்கும் நாட்களில், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், தானாகவே சரியாகி விடும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, முறையான சிகிச்சை எடுத்தால், சில நாட்களில் சரியாகி விடும். கொரோனா வைரசால், நுரையீரல் பாதித்து சரியான பிறகும், வைரசின் தாக்கத்தால், ஏற்பிகள் எனப்படும், 'ரிசெப்டார்'கள், தேங்காய் சிரட்டையின் மேல் உள்ள நார் போன்று உள்ளது; இது, இயல்பு நிலைக்கு வர, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம்.

வைரஸ் தொற்று உடலில் நுழைந்தால், அது ஒட்டி வளர, ஏற்பிகள் எனப்படும் ரிசெப்டார் வேண்டும். கொரோனாவிற்கு நுரையீரல், சிறுகுடல், இதயத்தில் உள்ள, 'ஏ2' ஏற்பிகள் போன்று, டெங்கு வைரஸ் எதில் ஒட்டி வளர்கிறது என்பது, இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

கல்லீரல், ரத்தத்தில் உள்ள புரதம் என்று, ஒவ்வோர் ஆய்வும் ஒன்றை சொல்கிறது. ஆனால், டெங்கு பாதிப்பு வந்தால், அறிகுறிகளை வைத்து, அடுத்து என்ன என்பதை கணிக்க முடியும்; அதற்கு ஏற்ப சிகிச்சை தரலாம். கொரோனாவில் அது சாத்தியப்படவில்லை. முக கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக, தண்ணீர் தேங்காமல் பராமரிப்பது போன்றவற்றால், இரண்டு தொற்றையும் தடுக்கலாம்.

விட்டமின் மாத்திரை

வைரஸ் தொற்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பல விட்டமின்கள் அடங்கிய மாத்திரைகளை தரலாம். இந்த மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன், பாக்டீரியா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், பாக்டீரியாவுக்கு விட்டமின் மாத்திரைகள் தான் உணவு; அதை சாப்பிட்டு பல்கி பெருகி விடும்.

டாக்டர் வி.சீனிவாசன்,

நெஞ்சக மருத்துவ ஆலோசகர்,

சென்னை.

97910 16247


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us