PUBLISHED ON : செப் 29, 2013

‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றை தடுப்பூசிகள் மூலம், கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’
“வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி, 16 ஊசிகள் போடும் காலம் மலையேறி விட்டது. தசையில் நான்கு, ஐந்து ஊசிகள் போட்டால் போதும். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது; உயிர் பறிபோகும்,” என, டாக்டர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் மட்டும், ஆண்டுக்கு, 20 ஆயிரம் பேர், ‘ரேபிஸ்’ நோயால் இறக்கின்றனர்.
உலகில் ரேபிஸ் நோயால் இறப்போரில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.
ரேபிஸ் நோய்: நாய்கள் கடிப்பதன் மூலம், 97 சதவீதமும், பூனை, நரி, வவ்வால் மற்றும் செல்ல பிராணிகள் கடிப்பதால், மூன்று சதவீதமும், ரேபிஸ் நோய் பரவுகிறது.
‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றைத் தடுப்பூசிகள் மூலம், முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை.
வெறிநாய் கடிக்கு ஆளாவோர், தொப்புளைச் சுற்றி, 16 ஊசி போடும் நிலை, 2004 வரை இருந்தது. தற்போது அப்படி இல்லை. கடிபட்ட, 0, 3, 7, 14, 28 என, ஐந்து நாட்கள், தசை, தோல் பகுதியில், ஊசி போட்டால் போதும்.
தடுப்பூசி அவசியம்: பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், நாய் கடிபட்டோரில், 68.4 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போடுகின்றனர்; 31.6 சதவீதம் பேர், தடுப்பூசி போடாமல், அலட்சியம் காட்டுகின்றனர். இது தான், உயிரிழிப்புக்கு வழி வகுத்து விடுகிறது. பொதுமக்கள் இதில் உஷாராக இருந்தாலே போதும்; ரேபிஸ் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். விவரம் தெரியாமல் மக்கள் செய்யும் செயல்களால், ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்து, டாக்டர் கனசபை கூறியதாவது:
செய்யக்கூடியவை
* நாய் கடித்த காயத்தை, 15 நிமிட நேரம் நன்றாக சோப்பு போட்டு கழுவுதல்
* கிருமி நாசினியை உபயோகித்தல்
* தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனையை நாடுதல்
* Immunoglobulin என்ற, 400 ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி போடுதல்
* 4, 5 தவணை தடுப்பூசி போடுதல்
செய்யக்கூடாதவை
* காயத்திற்கு தையல் போடுதல்
* மாற்று மருந்துகளை உபயோகித்தல் (சுண்ணாம்பு தடவுதல், பச்சிலைகள் பூசுதல்; கள்ளிப்பால் ஊற்றுதல்)
* காயம் பட்ட இடத்தில் கட்டு போடுதல்.
* செல்ல நாய் குட்டிகள் நாவினால் நக்குவது, கடிப்பது போன்றவற்றில் கவனக்குறைவாக இருத்தல்.
