தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/50,000 சுக பிரசவங்களை செய்வித்த அபூர்வ டாக்டர்!

50,000 சுக பிரசவங்களை செய்வித்த அபூர்வ டாக்டர்!

50,000 சுக பிரசவங்களை செய்வித்த அபூர்வ டாக்டர்!


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்துாரில் வசிப்பவர் டாக்டர் தாமரை ஹரிபாபு. கடந்த 48 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராக பணி செய்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன், 50,000 சுக பிரசவங்களை செய்வித்துள்ள இவர், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், மிகக் குறைவான கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு இலவசமாகவே மருத்துவ சேவை செய்கிறார். பாட்டி, தாய், மகள் என்று மூன்று தலைமுறையினருக்கு பிரசவம் பார்த்துள்ள இவரை, 50 கி.மீ., சுற்று வட்டாரத்தில் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. எப்படி இது சாத்தியமாயிற்று என்பதை, 'தினமலர்' நாளிதழுடன் பகிர்ந்து கொள்கிறார்:

கடந்த 1975ம் ஆண்டு, மதுரை மருத்துவக் கல்லுாரியில் படிப்பை முடித்து, பள்ளத்துார் அரசு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தேன். அந்த காலகட்டத்தில் இங்குள்ள கிராமங்களில் அனைவருக்கும் சுகபிரசவம் தான் ஆனது.

அன்று...

கிராமத்து பெண்கள் தினமும் கிணற்றில் நீர் இறைத்து, துணி துவைப்பர்; அம்மியில் அரைப்பர். உரலில் குத்துவது, இடிப்பது, ஆட்டுரலில் மாவு ஆட்டுவது என்று உடல் உழைப்பில் தேர்ந்தவர்களாக பெண்கள் இருந்தனர். கர்ப்ப காலத்திலும் இது போன்ற வேலைகள் அனைத்தையும் செய்வர். அதனால் தானாகவே சுகபிரசவம் ஆகிவிடும். காரணம், இடுப்பு, வயிற்றைச் சுற்றியுள்ள தசை எல்லாம் வலிமையாக இருந்தது.

கர்ப்பிணிகள் பொருட்கள் வாங்க சந்தைக்கு வருவர். சாமான் வாங்கும் சமயத்தில் பிரசவ வலி எடுத்தால், அருகில் உள்ள எங்கள் மருத்துவமனைக்கு வந்து விடுவர். அடுத்த அரை மணி நேரத்தில் சுகபிரசவம் ஆகிவிடும். அந்த காலத்து பெண்களின் உடல் வலிமை அப்படி இருந்தது. அது மட்டுமல்ல, தற்போது இருப்பதை போன்று இல்லாமல், 'என்ன ஆனாலும் சரி, டாக்டர் நீங்க தான் பார்க்கணும் என்று, டாக்டர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தனர். இதனால், அரசு வேலை, சம்பளம் கிடைக்கிறது என்று இல்லாமல், நம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று அக்கறையாக கவனித்து, முடிந்த வரை சுகபிரசவம் செய்வித்தோம்.

'உங்களுக்கு வயதாகி விட்டது; அதிகம் மெனக்கெட வேண்டாம். ஆலோசனை, வழிகாட்டுதலை மட்டும் தாருங்கள் என்று மற்றவர்கள் சொல்வதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது என்பதால், கடந்த 15 ஆண்டுகளாக நான் பிரசவம் பார்ப்பதில்லை. பிறந்தவுடன் குழந்தை அழாவிட்டால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று அம்பு பாய்வது போன்று உடம்பு, மனதிற்குள் ஒரு வேகம் வரும். குழந்தையை எடுத்து, ஊதி, ஆக்சிஜன் கொடுத்து, 'சிரிஞ்சில்' மருந்து எடுத்து தொப்புள் கொடி வழியே செலுத்தி... சில நிமிடங்களில் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் வந்ததும், நாம் தான் இதைச் செய்தோமா என்று வியப்பாக இருக்கும். வயதானால் இந்த வேகம் இருக்காது. எனவே, பொறுப்புணர்வோடு ஆலோசனை மட்டும் தருகிறேன். கடந்த 15 ஆண்டுகளும் பிரசவம் பார்த்திருந்தால், லட்சம் சுகபிரசவம் கூட வந்திருக்கும்.

இன்று...

தற்போதைய பெண்கள் உடலளவில் வலிமையாக இல்லை. டாக்டர் மேல் நம்பிக்கை இல்லை. கண்டதையும் அரைகுறையாக படித்து விட்டு பயப்படுகின்றனர். கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் தரும் நேரங்களில், 'டிவி' பார்ப்பது குழந்தையை பாதிக்கும். அவசியமான, சமச்சீரான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதில்லை. எல்லாமே சுலபமாக கிடைப்பதால், உடல் உழைப்பே இல்லை. மனதிலும் தைரியம் கிடையாது என்று ஆதங்கப்பட்டார்.

டாக்டர் தாமரை ஹரிபாபு, தமிழ் மொழியிலும் மிகுந்த ஆற்றல் கொண்டவர். தமிழில் பல நுால்களை எழுதியுள்ள இவர், நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் மனப்பாடமாக சொல்லக்கூடியவர்.

'ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் பிரசவத்திற்கு வந்திருப்பர். அவர்களை கவனித்த பின், காத்திருக்கும் நேரத்தில் தமிழ் இலக்கியங்களை படிப்பேன். திராவிட இலக்கியமான திவ்ய பிரபந்தத்தில் உருகி, கண்ணீர் விட்டிருக்கிறேன். அந்த ஆற்றல் தமிழுக்கும், பக்திக்கும் உள்ளது என்றார் டாக்டர் தாமரை ஹரிபாபு.

டாக்டர் தாமரை ஹரிபாபு,

மகப்பேறு சிறப்பு மருத்துவர்,

பள்ளத்துார், காரைக்குடி93443 07082, 94420 41696

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us