குடிப்பழக்கத்தை மன உறுதியுடன் ஒரே நாளில் நிறுத்த வேண்டும்!
குடிப்பழக்கத்தை மன உறுதியுடன் ஒரே நாளில் நிறுத்த வேண்டும்!
PUBLISHED ON : ஜன 23, 2011

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு ஏதாவது அருந்தும் பழக்கம், ஆபத்தை விளைவிக்கும். 'பயங்கரமான குற்றங்கள்' என அழைக்கப்படுபவற்றில், இப்பழக்கமும் அடங்கும்.
விநாயக சதுர்த்தி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, தொடர்ந்து பண்டிகைக் காலமாக இருந்தது. இந்த நான்கு மாதங்களில், தொடர்ந்து சாப்பிடுவது, பானங்கள் பருகுவது என நாட்களைக் கடத்தியிருப்போம். இது போன்ற பழக்கங்களால், உடல் எடை, மிக எளிதில் அதிகரித்திருக்கும். உங்களுக்கு தேவையானதை விட, 3,500 கலோரிச் சத்து கொண்ட உணவை, அதிகமாக உண்டால், உங்களை அறியாமலேயே 2.2 கிலோ எடை அதிகரித்திருக்கும். சராசரியாக 70 கிலோ எடையுள்ள, 5.8 அடி உயரமுள்ள ஒருவருக்கு தேவையான தினசரி கலோரி அளவு 2,000 தான். உடற்பயிற்சி இல்லாதவருக்கு உரிய அளவு இது. பண்டிகைக் காலம் நெருங்காதவரை, இவர் உடல் எடை அதிகரிக்காது. சிறிதளவு அதிகமாக உண்ண அவர் நினைத்தாலும், உதாரணமாக, ஒரு ஆம்லெட் (150 கலோரி), ஒரு வடை (100 கலோரி), சமோசா (200 கலோரி), அல்வா (100 கிராம் - 322 கலோரி), பராத்தா (300 கலோரி) அல்லது 100 கிராம் வேர்க்கடலையோ, முந்திரியோ (600 கலோரி) சாப்பிட்டால், உடல் எடை ஏறும். சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால், அதிகமாய் சாப்பிட தூண்டும். உடல் உழைப்பு இல்லாமல், இது போன்று அதிகமாய் சாப்பிடும் போது, உடல் எடை அதிகரிக்கும். இறுதியில், அவர் அறியாமலேயே, 5 முதல் 10 கிலோ வரை எடை அதிகரித்திருக்கும். புத்தாண்டில் ஏதாவது சீர்திருத்தம் கடைபிடிக்க துவங்கி இருக்கிறீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து துவங்குங்கள். தினமும் ஒரு மணி நேர நடை பயிற்சி, ஓட்டம், நீச்சல் அல்லது அரை மணி நேரம் தொடர்ந்து மாடிப்படி ஏறி இறங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். இப்படி செய்வது, தினமும் 300 முதல் 350 கலோரி சத்தை கரைய வைக்கிறது. பண்டிகைக் காலங்களில், உங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. விசேஷ நாட்களில், மது அருந்துவதையும் சடங்கு போல் மக்கள் செய்கின்றனர். சாத்வீகமான, கட்டுப்பாடான நாடாக இந்தியா கருதப்பட்டாலும், மது அருந்தும் போக்கு அதிகரித்துள்ளது. ஆண்களில் 21 சதவீதத்தினரும், பெண்களில் 5 சதவீதத்தினரும் மது அருந்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகம்; குஜராத்தில் தான் குறைவு. மது விற்பனையால் அரசும், மதுபான தொழிற்சாலைகளும் அதிக வருமானம் காண்கின்றன. 'சந்தோஷமான தருணங்களின் மன்னன்' என, மது விளம்பரப்படுத்தப்படுகிறது. பெண்களையும், முதல் முறையாக மது அருந்துபவர்களையும் இழுக்க, மிதமான, வாசனை கூட்டப்பட்ட பானங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், கவலைகளை மறந்து, மற்றவர்களுடன் அனுசரித்துப் போகவும் கருதி, மக்கள் மது அருந்துகின்றனர். முதலில், வார இறுதி நாட்களிலும், விசேஷ காலங்களிலும், நண்பர்களுடன் மட்டும் என, இப்பழக்கம் துவங்குகிறது. முதலில் சிறிய பழக்கமாக இருந்தாலும், நாளடைவில், இவர்களில் 20 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகி விடுகின்றனர்; 20 சதவீதத்தினர், மதுவே வாழ்க்கை என்றாகி, குடும்பம் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர். கட்டுப்படுத்த முடியாத பழக்கமாகி விடும் மது, மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டுகிறது. இரவில் குடிக்கும் பழக்கம், மாலை என்றாகி, மதியத்திலிருந்து என்றாகி, பின், காலை தூங்கி எழுந்த உடனேயே மது குடிப்பது என்றாகி விடுகிறது. பின், அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதற்கு பழக்கப்பட்ட மூளை, 'குடித்தது போதும்' என்று, கட்டளையெல்லாம் இடாது. எனவே, 'கிக்' வேண்டும் என்றால், மூச்சுமுட்ட குடிக்கும் நிலை ஏற்படும். மது குடிக்காமல் தவிர்க்கும் போது, தூக்கமின்மை, படபடப்பு, நரம்புகளில் நடுக்கம், தொடர்ந்து யாரோ பேசுவது போன்று காதில் ஒலிப்பது, நடை பின் வாங்குதல், உடல் முழுவதும் நடுக்கம் ஏற்பட்டு, நடை பின்னிக் கொள்ளுதல் ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மது குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின், மூளை, இருதயம், கல்லீரல், கணையம், வயிறு ஆகிய அனைத்தும் பாதிப்படையும். எனவே, மது குடிப்பதை நிறுத்த நினைப்போர், மன உறுதியுடன், ஒரே நாளில் நிறுத்தி விட வேண்டும். படிப்படியாக நிறுத்த முடியாது. காரணம், அப்படி செய்யும் போது, மீண்டும் அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தோல்வியையே சந்திக்க நேரிடும். இப்பழக்கத்திலிருந்து மீள வைத்து, உதவி மற்றும் ஆதரவுக் கரம் நீட்ட, மன தூய்மைப்படுத்தும் மையங்கள் இந்தியாவில் உள்ளன. சிகிச்சை பெறுபவர் பெயர் வெளியில் தெரியாமல் பாதுகாக்கும் நடைமுறையுடன் கூடிய மையங்களும் உள்ளன. அவற்றை அணுகிப் பயனடையலாம். போதை மருந்துக்கு அடிமையானோரும் இந்தியாவில் அதிகம் உள்ளனர். 10 லட்சம் பேர், ஹெராயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த எண்ணிக்கை 50 லட்சம் பேராக இருக்கக் கூடும்.மரியுவானா போன்ற வீரியம் குறைந்த போதைப் பொருளை, உடல் உழைப்பு அதிகம் கொண்ட தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எவ்வளவு பேர் இதைப் பயன்படுத்துகின்றனர் என்பதற்கான புள்ளி விவரம் இல்லை.
இப்போது, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் போதைப் பொருளைப் பயன்படுத்த துவங்கி விட்டனர். பொழுதுபோக்குக்காக ஒரே ஒரு முறை அல்லது இரு முறை என்று துவங்கும் போது, போதை அதிகமாவதால், அதற்கு அடிமையாகி விடுகின்றனர். வாய், மூக்கு வழியே உட்செலுத்தப்படும் போதை, நாளடைவில், நரம்பு வழியே போடும் நிலை ஏற்படுகிறது. இதனால், படிப்பு திறன், பணி திறன் குறைகிறது. ஹெப்பாடைட்டிஸ் பி, சி மற்றும் எய்ட்ஸ் நோய்களும் தொற்றிக் கொள்ளும். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக போதை ஏறினால், உயிரையே பறிக்கிறது. 'நான் போதைக்கு அடிமையாகவில்லை; கட்டுப்பாட்டில் தான் இருக்கிறேன்' என்று நினைப்பதெல்லாம், மாயையே!
தூக்கமின்மை, வலி ஆகியவற்றை விரட்டி, புத்துணர்வாக இருக்க, பெரும்பாலானோர், கடைகளில் கிடைக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். 'டைபென்ஹைட்ராமைன்' கலந்த, 'பெனட்ரில்' போன்ற இருமல் மருந்துகளை சாப்பிடுகின்றனர். 'டெக்ஸ்ட்ரோபாக்சிபீன்' போன்ற மருந்துகளையும் சாப்பிடுகின்றனர்; ஊசியாகப் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில், காபீன் கலந்துள்ள கோலா பானங்களுடன் இந்த மருந்துகளை கலந்து பருகுகின்றனர். சிலர், 'அல்ப்ராக்சோலம், டயாசிபாம்' போன்ற தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். தேவைப்பட்டால், இதையே அதிகளவு சாப்பிட்டு விடுகின்றனர். இதனால், தூக்கத்தில் தடை ஏற்படும். திடீரென தூக்கத்திலிருந்து விழித்தல், தெளிவான சிந்தனை தடைபடுதல், முடிவு எடுப்பதில் தடுமாற்றம், சோர்வு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும். மருந்து உட்கொள்ள முடியாமல் போனால், கோபம் ஏற்படும். உணவு, மருந்து உட்கொள்ளுதல், பார்ட்டிகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவை நீண்ட நெடும் ஆயுளுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் அவசியம். மனநிலையை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும், 'எண்டார்பின்' என்ற சுரப்பு நீர், நம் உடலுக்கு அவசியம். அது உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும். மகிழ்ச்சியான, நல்ல சிந்தனைகள், கவனம் ஆகியவை, தினமும் ஒரு மணி நேர ஓட்டப் பயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் ஆகியவை மூலம் கிடைக்கும். இதற்கு, மதுவும், போதைப் பொருட்களும் தேவையில்லை!

