PUBLISHED ON : மார் 29, 2021

அறிகுறிகளே இல்லாத சர்க்கரை கோளாறால் பாதிப்படைவது, பொதுவான விஷயமாகி வருகிறது. சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் உட்பட பல பாதிப்புகள் ஏற்பட்ட பிறகே, சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்து, சிகிச்சை செய்கின்றனர்.
சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தால், சிறுநீரக கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம். 14 - 15 வயது பெண்களுக்கே சர்க்கரை கோளாறு இருப்பதை பார்க்க முடிகிறது.
தற்போது, 20 வயதில் இருப்பவர்களுக்கு, அடுத்த, 10 ஆண்டுகளில், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து, சிறுநீரக கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பு, மிக அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எவையெல்லாம் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதை அறிந்து, அதற்கேற்ப நம் உணவுப் பட்டியல் இருந்தால் நல்லது.
பழச்சாறு குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் பழச்சாறுக்கு, குறைந்தது, மூன்று பழங்கள் பிழிய வேண்டும். இயற்கையாக அதில் உள்ள சர்க்கரை தவிர, நாமும் சர்க்கரை சேர்ப்போம். பழத்தை மிக்சியில் அடிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்து அழிந்து, வெறும் சர்க்கரை மட்டுமே மிஞ்சும். அதுவே, முழு பழமாக சாப்பிட்டால், முழுமையாக நார்ச்சத்து கிடைக்கும். ஒரு பழத்தை முழுதாக கடித்து சாப்பிட்டாலே, வயிறு நிறைந்து விடும்.உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை குறைவாக சாப்பிட்டு, பச்சை காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் என, வேறு வேறு விதங்களில் அரிசி சாப்பிடுவதை தவிர்த்து, சிறு தானியங்கள், பயறு வகைகள் என்று, அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்; புரதம் அதிகமாக சாப்பிட வேண்டும்; உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
