PUBLISHED ON : மே 07, 2021

ஊரடங்கு எதிரொலியாக பள்ளிகள் நடத்தும் 'ஆன்லைன்' வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பார்வை பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் பள்ளிகள் 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்தி வருகின்றன. தனியார் பள்ளிகள் வெப் கேமிரா மூலமாக தினமும், 2 மணி நேரம் வரை வகுப்புகள் நடத்துகின்றன.
இவ்வாறு தொடர்ந்து, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் வழியாக கவனிக்கும் மாணவர்களுக்கு, கண் எரிச்சல், கண் சிவப்பு, கண் அரிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரையை, கண்களுக்கு மிக அருகில் வைத்து மாணவர்கள் பாடம் கற்பது தான் இதற்கு முக்கிய காரணம்.
அப்போது தான் முகம் வெப் கேமிராவில் பதிவாகும். அதனால், சிறு வயதிலே தங்கள் பிள்ளைகள் கண்ணாடி அணிய வேண்டிய நிலை வந்தவிடுமோ என பெரும்பாலான பெற்றோர்கள் அச்சமடைகின்றனர்.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'குழந்தைகள் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடும் போது கண் பிரச்சனை ஏற்படும் என கண்டிப்போம். இப்போது அந்த பிரச்னை 'ஆன்லைன்' வகுப்பால் வந்துவிடுமோ என பயம் வருகிறது.
'அட்வான்ஸ் டெக்னாலஜி' என பெருமைப்பட்டு கொண்டாலும், குழந்தைக்கு பார்வை குறைபாடு ஏற்படுமோ என்ற அச்சமும் தொற்றி கொள்கிறது,' என்றனர்.
மருத்துவர் சொல்வது என்ன?
டாக்டர் இளஞ்சேரன் கூறியதாவது: 'மொபைல் போன் பார்த்து கொண்டிருக்கும்போது கண் இமைக்கவே மறந்துவிடுவோம். இரண்டு மூன்று நிமிடங்கள்கூட கண் இமைக்காமல் கூர்ந்து பார்க்கும்போது, கண்ணின் விழி வெண்படலத்திற்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைகிறது.
இதனால், கண்களில் எரிச்சல், அழுத்தம், வலி ஏற்படும். கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படலாம். துவக்கப்பள்ளி மாணவர்கள் சமீப காலமாக அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மொபைல் போன் போன்ற சாதனங்களை அதிக வெளிச்சத்திலோ அல்லது மிகவும் குறைவான வெளிச்சத்திலோ வைத்து பார்க்காமல் மீடியமான வெளிச்சத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
'வைட்டமின் ஏ' நிறைந்த உணவுகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாம்பழம், கேரட், பப்பாளி, திராட்சை, கீரை வகைகளை தினமும் குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம். குழந்தைகளின் கண்களில் ஏதேனும் அலர்ஜி, வீக்கம், வலி போன்றவை ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்
