PUBLISHED ON : செப் 03, 2023

வியர்வை அதிகமாக இருக்கும் வெப்ப நாட்களில், தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்க பயன்படுத்தும் 'மாய்ஸ்ரைசர் லோஷன்'களை யாரும் உபயோகிப்பதில்லை. இது தவறு. நம்முடைய ஊரைப் பொருத்தவரை, ஒன்பது மாதங்கள் உஷ்ணம் இருக்கும்.
தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்தாலும் பல சமயங்களில் தோல் வறண்டு விடும். இதனால், குளித்த பின் ஈரத்தை நன்கு துடைத்து, மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, 'சன் ஸ்கிரீன்' லோஷன்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை.
தோலின் மேல் உள்ள மெல்லிய துளைகளை மூடி, வியர்வை வெளியேறுவதைத் தடுக்கும் என்று, 'சன் ஸ்கிரீன்' பற்றிய தவறான எண்ணம் இருக்கிறது. காலையில் ஒரு முறை பயன்படுத்தியதோடு, நாள் முழுதும் வெயிலில் அலைவர்.
'சன் ஸ்கிரீன் போடுகிறேன்; ஆனாலும் தோல் கறுத்து விட்டது' என்று வருவர். அதிக நேரம் வெளியில் இருப்பவர்கள் அவரவர் தோலின் தன்மைக்கு ஏற்ற, சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும் திறன், 35 - 50 எஸ்.பி.எப்., என்ற அளவில் இருக்கும் லோஷனை பயன்படுத்த வேண்டும்.
தோலின் தன்மை நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், வீட்டில் உள்ள அனைவரும் ஒரே லோஷனை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, 'டீன் ஏஜ்' வயது பெண்ணிற்கு தோல் எண்ணெய் பசையுடன் இருக்கும். இவர்கள், கிரீம் பதத்தில் உள்ளதை பயன்படுத்தலாம். நிறைய பருக்கள் இருந்தால், அதற்கென்று உள்ள திரவ நிலையில், அடர்த்திக் குறைவான லோஷனை உபயோகிப்பதால், வியர்வை துளைகளை அடைக்காது.
இன்னொரு விஷயம், விளம்பரங்களில் காட்டுவது போன்று லோஷனைத் தடவியதும், அப்படியே வெளியில் செல்வது கூடாது. காரணம், என்ன தான் சிறப்பான லோஷனாக இருந்தாலும். புற ஊதா கதிர்களில் இருந்து 50 சதவீத பாதுகாப்பு தான் இதில் கிடைக்கும். குடை, பருத்தி துணியால் நன்றாக முகம், கைகளை மூடிக் கொள்ள வேண்டும்.
தோலின் தன்மை ஒரே மாதிரி நிலையாக இருப்பதில்லை. தினமும் அன்று சாப்பிடும் உணவு, வெளிகாரணிக்கு ஏற்ப மாறும்.
டாக்டர் பல்லவி தாமன், தோல் மருத்துவர், சென்னை 74027 23430
