PUBLISHED ON : ஜூலை 12, 2015
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால், தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் தடவினால், சீக்கிரம் குணமாகிவிடும்.
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து, அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
நெருப்பு, சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும்; கொப்பளமும் ஏற்படாது.
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
நூறு மில்லி பசுவின் பாலில் அதே அளவு தண்ணீர் விட்டு, வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியை கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம். பீட்ருட் கிழங்கின் சாற்றுடன், சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கர்ப்பிணிகள் கேரட் சாறும் தேனும் கலந்து பருகி வந்தால், வாந்தி நிற்கும்; உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து, பாகம் செய்து சாப்பிட்டால் தளர்ச்சி விலகும்.

