தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/விரதம் இருப்பது உடலுக்கு நல்லது!

விரதம் இருப்பது உடலுக்கு நல்லது!

விரதம் இருப்பது உடலுக்கு நல்லது!


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வகையில் விரதம் இருக்கின்றனர். நம் கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட விஷயமாக, அது கருதப்படுகிறது. இந்துக்கள், வாரத்தில் சில நாட்களிலும், ஜெயினர்கள், மாலை 6 மணிக்குப் பிறகும், முஸ்லிம் மக்கள், ரமலான் மாதத்திலும், கிறிஸ்துவ மக்கள், தவக்காலத்திலும் விரதம் இருக்கின்றனர். இந்தியாவில், போராட்டக்காரர்கள், அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'அநீதியைக் கைகொள்ளும் அதிகார வர்க்கத்தினரை, உண்ணாவிரதம், மறைமுகமாக அவமானப்படுத்துகிறது' என, காந்தி கூட கூறியுள்ளார்.



உணவை முற்றிலுமாகவோ, ஒரு பகுதி அளவிலோ, கட்டுப்பாடான அளவிலோ, சாப்பிடாமல் ஒதுக்குவது தான், உண்ணாவிரதம் என்றழைக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் எல்லா விரதங்களும், முழுமையான விரதம் என, கூற முடியாது. சிலர் அனைத்து வகை உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் பட்டினி இருப்பர். சிலர், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் உணவு உண்ணாமல் இருப்பர். சிலரோ, குறிப்பிட்ட உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பர். பதினைந்து வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கர்ப்பிணிகள், வெளியிடங்களில் பணி செய்பவர்கள், கடுமையான உடல் உழைப்பு கொண்டவர்கள், நோயாளிகள் ஆகியோர் உண்ணாவிரதம் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. விரதம் இருக்கும்போது, சில உயிரி ரசாயனங்கள், வயிற்றுக்குக் கேடு விளைவிக்கின்றன.



உடல் நல்ல நிலையில் இருக்கும் இள வயதினர், 10 முதல், 12 நாள் வரை எதுவும் அருந்தாமல் இருக்க முடியும். தண்ணீர் மட்டும் பருகும் நிலையில், 50 முதல், 60 நாட்கள் வரை, தாக்குப் பிடிக்க முடியும். குழந்தைகளும், வயதானவர்களும் வெகு வேகமாக மாண்டு விடுவர். நம் சாப்பிடும் உணவு அனைத்தும் குளுக்கோசாகவும், கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்களாகச் சிதைந்து விடுகின்றன. இதில் குளுக்கோஸ், உடலின் பிரதான சக்திக்கு ஆதாரம்; சதைகளுக்கு மிகவும் அவசியமானது. உணவு சாப்பிடாமல் இருக்கும்போது, உடலில் அதிகப்படியாகத் தேங்கியுள்ள குளுக்கோஸ் முழுதும், சக்திக்காக கரைக்கப்படுகிறது. இதுவும் முற்றிலும் குறைந்து போகும்போது, கொழுப்புகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆண்களின் உடல் எடையில், 7 சதவீதமும், பெண்களின் உடலில், 10 சதவீதமும் கொழுப்பு உண்டு. இதுவும் கரைந்து போகும்போது, உடலுக்கான உணவுத் தேவை மிகவும் அதிகரிக்கும். உணவு கிடைக்கவில்லை எனில், உடலில் தசைகள், வளர்சிதை மாற்றமடைகின்றன. உடலும், தோலும் சுருங்கி, தோற்றமே மாறி விடுகிறது. உடலில் எலக்ட்ரோலைட் குறைந்து, இருதயம் தாறுமாறாகத் துடிக்கத் துவங்கும்; சிறுநீரகம் சரியாக வேலை செய்யாது. முழுமையான பட்டினி என்ற நிலையை அடையும்போது, மரணம் சம்பவிக்கும். சில வகையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு, காலி வயிறுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை, 'பாஸ்டிங்'கில் இருக்க வேண்டும்' அல்லது, 'எம்ட்டி ஸ்டமக்'குடன் வர வேண்டும்' என, பரிசோதனை நிபுணர்கள் கூறக் கேட்கலாம். இந்த இரண்டு சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு. மருத்துவ ரீதியாக, 'பாஸ்டிங்' என்பது, 8 முதல் 12 மணி நேரம் உணவு அருந்தாமல் இருப்பது. அப்போது வளர்சிதை மாற்றத்தில் சில மாறுபாடுகள் ஏற்படும். உடலில், குளுக்கோஸ் அளவைக் கண்டறிவது, கொழுப்பு அளவு கண்டறிவது ஆகியவற்றுக்கு, 'பாஸ்டிங்' நிலை தேவை.



'எம்ட்டி ஸ்டமக்' என்றால், உணவு உண்ட பின், 3 முதல் 5 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது; வயிற்றிலுள்ள உணவு, ஜீரணமாகி முடிந்த நிலை அது. ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில், முன்னோர் காலத்திலிருந்தே, தொடர்ச்சியாகவோ, இடைவெளி விட்டோ, குறிப்பிட்ட நாட்களுக்கென சீராகவோ, விரதம் இருப்பது வலியுறுத்தப்படுகிறது. இப்போது, கொழுப்பு மற்றும் ரத்தச் சுத்தத்திற்கு, விரதம் இருப்பது நல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, முதியோர்களுக்கான தேசிய மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாள் விட்டு ஒருநாள் விரதம் இருப்பது நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சீரான இடைவெளியில், கலோரி அளவை கட்டுப்படுத்தினால், புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய உபாதைகளை வெகுவாகக் குறைக்கலாம் என, கண்டறியப்பட்டுள்ளது. இப்பழக்கம், மூப்பையும் குறைத்து, வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடை குறைப்பதாகக் கூறி, உண்ணாவிரதப் பழக்கத்தை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், உணவு சாப்பிடாத நாட்களில், அவர்களை அறியாமல், கோபப்பட்டு, எரிச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால், உடலில் சக்தியை சேமிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு, சாப்பிடும் நேரங்களில், 'சேமித்து வைப்பதற்காகவே' அதிகமாகச் சாப்பிடும் மனநிலையைப் பெற்று விடுகின்றனர். இதனால், உடலில் வளர்சிதை மாற்றம் சீரற்றுப் போகிறது. இது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்; உடல் எடையும் குறையாது!



- டாக்டர் கீதா மத்தாய்

குழந்தை நல மருத்துவர், வேலூர்.

தொடர்புக்கு:

yourhealthgm@yahoo.co.in



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us