PUBLISHED ON : டிச 20, 2015

சத்துள்ள காய்கறிகள், கீரைகளை சமைக்கும் பெண்கள், அதை தாங்கள் சாப்பிட தவறிவிடுகின்றனர். குடும்பத்திற்காக உழைக்கவும், போதிய சத்துக்கள் தேவையே. இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளில் சிக்கி, மருத்துவரை அணுக வேண்டிய நிலை வரலாம்.
பொதுவாக பெண்களின் உடல் அமைப்பு மற்றும் வேலை திறனுக்கு, ஐந்து ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. இதை சாப்பிட்டாலே, 40 வயதுக்கு மேல் வரும் களைப்பு, எலும்பு தேய்மானம், முதுகுவலி உள்ளிட்ட பல தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
வைட்டமின் ஈ: இது, சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான்; உயிரணுக்களை பாதுகாக்கிறது. போதுமான அளவு வைட்டமின் ஈ கிடைக்கவில்லை என்றால், மற்ற சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொட்டாசியம்: பொட்டாசியம் ஒரு மின்பகு பொருளாகும். இது, நரம்பு மண்டலம் முனைப்பாக செயல்படவும், தசைகளை நயமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகிறது. போதுமான பொட்டாசியம் கிடைக்கவில்லை என்றால், எளிதில் களைப்படைவதாக உணர்வோம். இதை தவிர்க்க, நாம் போதுமான அளவு, பொட்டாசியம் நிறைந்த உணவு மற்றும் அளவான சோடியம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் கலந்த உணவுகள்: வேக வைத்த தோல் நீக்காத உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடலாம். ஒரு கப் சமைத்த பயறு, பருப்பு சூப் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம். தினசரி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதாலும், பொட்டாசியத்தை பெற முடியும்.
கால்சியம்: இது, வலிமைமிக்க வலுவான எலும்புகள் உருவாக உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.
வைட்டமின் ஏ: இந்த ஊட்டச்சத்து கண்பார்வை, குறிப்பாக, இரவு நேரப்பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது, நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும், வைரஸ்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. வயது அதிகரித்தாலும், புலனுணர்வு செயல்பாட்டை பாதுகாக்க, அதிக வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.
மக்னீஷியம்: மெக்னீசியம் உடலில் நடக்கும், நூற்றுக்கணக்கான ரசாயன மாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணுக்கள் சரியாக வேலை செய்ய, ஆற்றலை சேமித்து கொடுத்து உதவுகிறது. இது, எலும்புகள் வலிமையுடன் இருக்கவும், நரம்புகள் மற்றும் தசைகள் தொய்வில்லாமல், நயத்துடன் பராமரிக்கவும், ரத்தம் தடையில்லாமல், சீராக உடல் முழுவதும் பாயவும் உதவுகிறது. இந்த தாது, பரிந்துரைக்கப்பட்ட, 38 சதவீதம் கிடைக்கப்பெற்றால், வளர்சிதை மாற்ற நோய் அறிகுறி தவிர்க்கப்படுமாம். இதை, மருத்துவ ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிக வயிற்று கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் கட்டுக்குள் இருக்கும்.

