PUBLISHED ON : ஜன 01, 2017

பூவரசம் மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவையாகும்.
மஞ்சள் வர்ணத்தில் பூக்கும், பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூவரசம் இலைகள் விஷத்தை போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். பூக்களை நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து, குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசி வந்தால் தோல் மென்மையாகும். சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து, அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம்பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லி லிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது.
வயதானவர்கள் மூட்டுப்பகுதியில், நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சம அளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசி வர, வீக்கம் குணமடையும். கசப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான, கால்நடை நோய்களை கட்டுப்படுத்துவதிலும், பூவரசம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது.
பூவரசம் காயை உடைத்தால், மஞ்சள் நிறத்தில் திரவம் வரும். அதை தேமல் மற்றும் படை வந்த இடத்தில் தடவினால், விரைவில் அரிப்பு நீங்கி, தேமல் மறையும். சீல் வடியும் புண்களில், பூவரசம் மரத்தின் பழுத்த இலைகளை வைத்து கட்டினால், நீர் உறிஞ்சப்பட்டு புண் நன்றாக ஆறிவிடும்.
ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த ஆலோசனைகளை பயன்படுத்துவது நல்லது.

