தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நுரை நுரையா பூந்திக்காய் பூந்திக் கொட்டை

நுரை நுரையா பூந்திக்காய் பூந்திக் கொட்டை

நுரை நுரையா பூந்திக்காய் பூந்திக் கொட்டை


PUBLISHED ON : மே 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாறிவரும் நவீன யுகத்தில் என்னதான் ஆடம்பர வசதிகள் இருந்தாலும் சிலருக்கு பழமை தான் பிடிக்கும். வடித்த சாதம், செக்கில் ஆட்டிய எண்ணெய், வாழை இலை சாப்பாடு என்பதுபோல், நுரை பொங்கும் மூலிகை குளியலும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமே.

அவசர கதியான ஓட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் நமக்கு உதவினாலும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரைப்பு சீயக்காய் போன்றவற்றின் மகிமை அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் தெரியும்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.

பெரும்பாலான சோப்புகள் கிருமிகளை நீக்கும் ஆசிட்களாகத்தான் செயல்படுகின்றன தவிர, தோலுக்கு எந்த நன்மையும் பயப்பது இல்லை. இவை தவிர பல்வேறு நிறத்திற்காக சோப்பில் சேர்க்கப்படும் சாயப்பொடிகளும், நுரைக்காக சேர்க்கப்படும் சல்பேட்டுகளும் தோல் வறட்சியை அதிகப்படுத்துவதுடன் அரிப்பையும், வறட்சியையும் உண்டாக்கிவிடுகின்றன. நாம் பலவகையான சோப்புகளை விரும்பி பயன்படுத்துவதற்கு காரணம் அவற்றின் நுரைப்புத்தன்மையே.

நுரை பொங்க குளித்துவிட்டு வந்தால்தான், குளித்தது போன்ற புத்துணர்ச்சி உண்டாகிறது என்ற மாயை அனைவரிடமும் நிலவிவருகிறது. பழங்காலத்தில் நுரை தரக்கூடிய பொருட்களை, குளியல் பொடியில் பயன்படுத்தினர். செம்பரத்தை பூ, துளசி, சுரை, பீர்க்கு குடுவைகள், வாழை மட்டை போன்றவை நுரை மற்றும் வழுவழுப்பு தருவதால், குளியல் பொடிகளில் இவற்றை பயன்படுத்தி குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இவற்றை உடனடியாக பயன்படுத்த வேண்டும். உலர்ந்தபின் பயன்படுத்தினால் இதன் நுரைப்புத்தன்மை மாறிவிடுவதுண்டு. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால், இவற்றின் பயன்பாடு குறைந்து சோப்பின் ஆதிக்கம் அதிகரித்தது.

நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான், நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.

சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

கேள்வி-பதில்

என் முகத்தில் பரு தழும்புகள் ஏராளமாக உள்ளன. அதுவும் கண்களுக்கு கீழ் கருவளையமும், சுருக்கமும் உள்ளது. எளிமையான வீட்டு மருத்துவம் கூறவும்.

தோலுரித்த உளுந்தை, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டிவிட வேண்டும். அத்துடன் பாசிப்பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் பசு வெண்ணெய் சேர்த்து, மைய அரைத்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இதுபோல் தினமும் செய்துவர முகம் பளபளப்படையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us