PUBLISHED ON : மார் 18, 2015

தினமும், காலை நேரத்தில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று, அதிக கலோரி உணவுகளை சாப்பிட்டு வெறுப்பு அடைந்தோருக்கு வித்தியாசமாகவும், அதேநேரம் அதிக கலோரி இல்லாத உணவாகவும் இருக்கிறது, குறுதானிய அரைக்கீரை அடை.
குறுதானிய அரைக்கீரை அடை செய்வது எப்படி
தேவையானவை
சாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி - அரை கிண்ணம்
அரைக்கீரை மற்றும் முருங்கை கீரை - அரை கிண்ணம்
மிளகாய் தூள் - தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மேற்சொன்ன மூன்று அரிசிகளையும் கழுவி, ஒன்றரை மணி நேரம் ஊற வைத்த பின், கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும். கீரைகளை நன்றாக கழுவி, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய கீரைகளை சேர்த்து கிளறி, அடைகளாக தட்டி, தோசை கல்லில் இட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான, சத்தான குறுதானிய அரைக்கீரை அடை தயார்.
பயன்கள்
சாமை, வரகு, மற்றும் தினை ஆகிய மூன்று அரிசிகளும், எல்லா வயதினருக்கும் எளிதில் ஜீரணமாக கூடியவை. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க இவை உதவும்; உடல் பருமனை குறைக்கும். மலச்சிக்கலை தினை அரிசி நீக்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற இது உதவும். இவற்றில் தாது உப்புகள், வைட்டமின் டி, பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற சத்துகள் உள்ளன.
- லீலாவதி சீனிவாசன்
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
