PUBLISHED ON : நவ 29, 2015

மழைக்காலத்தில் சில உணவுகளை தவிர்ப்பதாலும், சில உணவு பொருட்களை சேர்ப்பதாலும், நோய்கள் வராமல் தடுக்கலாம். மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் சிறந்த சாய்ஸ். நிலவேம்பு பொடியுடன், தண்ணீரை சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
மழைக் காலத்தில் உணவில், இனிப்பு அதிகம் வேண்டாம். பால், பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அதிகம் சாப்பிடக் கூடாது. மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை, மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவின் போது, தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது நல்லது. நீர் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் தவிருங்கள். கண்டிப்பாக மழைக் காலத்தில், உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவை சேர்க்காதிருத்தல் நல்லது.
மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது, சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும். மழைக்காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட, விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஒத்துக் கொள்ளாதவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. மழை சீசனில், கீரை அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் வேறு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம். அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம். அவை பிரஷ்ஷாக இருக்கும்படி, பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு.
அதனால், மீன் போன்றவை, பழைய ஸ்டாக் ஆக இருக்க வாய்ப்பு உண்டு. மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி-சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

