PUBLISHED ON : ஜூலை 10, 2016

புது காலணிகளை வாங்கும் போது, சில நடைமுறை கவனித்து வாங்க வேண்டும். காலணிகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடக்க வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும்; இறுக்கமானதை அணியக் கூடாது.
விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்றதையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை, நீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், தரம் குறைவதோடு, பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமலும் போகும்.
தரையில் வழுக்காமல், பிடிப்பு உள்ள காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் இருக்க வேண்டும். மழை காலங்களில், ரப்பர் காலணிகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும்.
வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், காலணி அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக, பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமானதை அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
பிளாஸ்டிக் காலணிகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்களுக்கு, பிளாஸ்டிக் காலணிகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும்; கண்களும் எரிச்சலடையும். அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் காலணிகளை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி பாலீஷ் செய்யும் போது, அழகும், ஆயுளும் கிடைக்கும். முக்கியமாக, அடுத்தவர்களின் காலணிகளை அணியக் கூடாது.
