கர்ப்ப கால சர்க்கரை கோளாறால் குழந்தைக்கு சிக்கல் வரலாம்!
கர்ப்ப கால சர்க்கரை கோளாறால் குழந்தைக்கு சிக்கல் வரலாம்!
PUBLISHED ON : நவ 14, 2019

சர்க்கரை கோளாறால் பெண்களுக்கு அபாயம் அதிகம் உள்ளதா?
சர்க்கரை
கோளாறு வந்தால், ஆண்களுக்கு எந்த அளவு அபாயம் இருக்கிறதோ, அதே அளவு
அபாயம், பெண்களுக்கும் உள்ளது. ஆனால், ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு
சர்க்கரை கோளாறை எதிர் கொள்வதற்கான நடைமுறை சிக்கல்கள், பல மடங்கு அதிகம்.
எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்?
குறிப்பாக,
சமையல்... கணவன், அப்பா, சகோதரன் என்று வீட்டில் இருக்கும் ஆணுக்கு
சர்க்கரை கோளாறு இருந்தால், குழந்தைக்கு கோளாறு என்றாலோ, அவர்களுக்கென்று,
உணவு தயாரித்து தருவதில், பெண்களுக்கு பிரச்னை இருப்பதில்லை.அதே சமயத்தில்,
பெண்ணுக்கு சர்க்கரை கோளாறு இருந்தால், தங்களுக்கென சமைக்கும் உணவை,
குழந்தையும், கணவனும் சாப்பிட மாட்டார்கள்;
அவர்களுக்கு தனியாக சமைக்க
வேண்டுமே என, சர்க்கரை கோளாறுக்கான பிரத்யேக உணவை, பெண்கள் பின்பற்றுவது
இல்லை; அடுத்தது, பரிசோதனை.வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு நேரம் கிடைத்து,
அவர்கள் எப்போது அழைத்து செல்கின்றனரோ, அப்போது தான் பரிசோதனைக்கு வர
முடிகிறது. மூன்றாவது, உடற்பயிற்சி. பெண்கள் உடற்பயிற்சியே செய்வதில்லை.
நடைபயிற்சி,
யோகா தவறாமல் செய்ய வேண்டும் என்றால், தனியாக செல்ல தயங்குகின்றனர். உடன்
வருவதற்கு யாரையாவது தேடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, பரிசோதனை,
உடற்பயிற்சி இந்த மூன்றும், சர்க்கரை கோளாறுக்கு முக்கியம். குடும்ப
பொறுப்புகளினால், தங்களால், இவற்றை சரியாக பின்பற்ற முடியவில்லை என்பதே, பல
பெண்கள் சொல்லும் காரணம்.
வேலைக்கு செல்லும் பெண்கள், அலுவலகம், வீடு
இரண்டையும் நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அதனால் ஏற்படும்
மன அழுத்தமும் சேர்ந்து விடுகிறது. அவர்களுக்கென, பிரத்யேகமாக நேரம் ஒதுக்க
முடிவதில்லை என்பது வருத்தமான விஷயம். பெண்களின் உடல் நலத்தில்
அக்கறையுடன் இருக்கும் ஆண்கள், குடும்ப உறுப்பினர்கள், மிகவும் அபூர்வமாகவே
உள்ளனர்.
பக்க விளைவுகள் பெண்களுக்கு எப்படி இருக்கும்?
கோளாறு
வந்தால், இருபாலருக்கும் பக்க விளைவுகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். நீண்ட
காலமாக சர்க்கரை கோளாறு இருந்து, முறையாக பராமரிக்காவிட்டால், கண்கள்,
சிறுநீரகங்கள், கால்கள், பாதங்கள் பாதிக்கும். பெண்களைப் பொறுத்தவரை, சமூக
காரணங்களை சொல்லி, பிரித்து வைத்து இருக்கிறோம். ஆண்களை காட்டிலும்,
பெண்களுக்கு கவனிப்பு குறைவாகவே இருக்கிறது.
இதற்கு யார் காரணம்?
இதற்கு
யாரையும் காரணம் சொல்ல முடியாது. நம்முடைய சமூக அமைப்பு, நம்பிக்கைகள்
அப்படித் தான் இருக்கிறது. பெண்கள், தங்களை கவனிக்காமல், கணவன்,
குழந்தைகள், பெற்றோரை, அதிக அக்கறையுடன் கவனிப்பது தான் நல்ல விஷயம் என,
நம்புகின்றனர். அப்படித் தான் கற்றுத் தரப்படுகிறது. இந்த மனநிலை ஆழமாக
பதிந்து விட்டதால், தன்னுடைய ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பது,
பெண்களுக்கு புரிவதேயில்லை.
கர்ப்ப கால சர்க்கரை கோளாறை எப்படி அணுகுகின்றனர்?
கர்ப்ப
காலத்தில் சர்க்கரை கோளாறு வரும்; குழந்தை பெற்றவுடன் சரியாகி விடும் என,
சாதாரணமான விஷயமாக நினைக்கின்றனர். அதில், குழந்தைக்கும், கர்ப்பிணிக்கும்
எவ்வளவு அபாயம் உள்ளது என்பதை, புரிந்து கொள்வதில்லை. கர்ப்ப காலத்தில்
சர்க்கரையை கட்டுக்குள் வைக்காவிட்டால், குழந்தைக்கு நிறைய சிக்கல்கள்
வரலாம். கர்ப்ப காலத்தில் சர்க்கரை கோளாறு இருந்தால், அடுத்த ஓரிரு
ஆண்டுகளில், டைப் - 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.கர்ப்ப
காலத்தில் சர்க்கரை கோளாறு இருந்த பெண்கள், குழந்தை பிறந்த பின், முறையாக
உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டு, உடல் எடையை சீராக
வைத்திருக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா
நீரிழிவு மருத்துவ ஆலோசகர்,
சென்னை
99624 28888, 89391 10000

