தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேட்கும் திறன் பரிசோதனை பிறந்த குழந்தைக்கு அவசியம்!

கேட்கும் திறன் பரிசோதனை பிறந்த குழந்தைக்கு அவசியம்!

கேட்கும் திறன் பரிசோதனை பிறந்த குழந்தைக்கு அவசியம்!


PUBLISHED ON : நவ 13, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காது கேளாமை கோளாறை எந்த வயதில் கண்டறிய முடியும்?

குழந்தை பிறந்த முதல் நாளிலேயே கண்டுபிடிக்க முடியும். 'ஓட்டோ அகோஸ்டிக் எமிஷன்' என்ற பரிசோதனையை, குழந்தை பிறந்த இரண்டாம் நாளில் செய்யலாம். இதன் வாயிலாக, குழந்தையின் கேட்கும் திறன் ஆரோக்கியமாக உள்ளதா, எந்த அளவு பாதிப்பு உள்ளது அல்லது முழுமையாக திறனே இல்லையா என்பதை, துல்லியமாக தெரிந்து கொள்ள இயலும். இது, மிகவும் எளிமையான, குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பரிசோதனை. இதனை, மருத்துவமனையில் உள்ள நர்ஸ் அல்லது 'ஆடியாலஜிஸ்ட்' என்று சொல்லப்படும், கேட்கும் திறனை பரிசோதிக்கும் தொழில்நுட்ப வல்லுனரால் செய்ய முடியும்.

பிறந்தவுடனேயே பரிசோதிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆயிரம் குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு, ஏதோ ஒரு விதத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ளது. குறையை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு விரைவில், பிரச்னைக்கான தீர்வை செய்ய முடியும். கருவியை பொருத்தினால் போதுமா அல்லது அறுவை சிகிச்சை செய்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரலாமா என்று பார்க்க முடியும்.ஒலிகளை கேட்க முடிந்தால் தான், தீவிர பயிற்சி தருவதன் வாயிலாக, வார்த்தைகளை குழந்தைக்கு கற்றுத் தர முடியும். எல்லா குழந்தைகளையும் போல, இந்த குழந்தையும், மூன்று வயதிற்குள் மொழியை கற்க முடியும்.

காது கேளாமையை பரிசோதிக்கும் வசதி உள்ளதா?

எங்களைப் போல, மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் தன்னார்வ பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மையங்கள் என, பரவலாக எல்லா இடத்திலும், இதற்கான வசதி உள்ளது. அரசு மகப்பேறு மருத்துவமனைகளில், குழந்த பிறந்தவுடன் கேட்கும் திறனை பரிசோதிப்பதை செய்கின்றனர்.காது கேட்கும் கருவியின் விலை சற்று அதிகமாக இருப்பதால், பொருளாதார வசதி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, அரசு இலவசமாக காது கேட்கும் கருவியை தருகிறது. 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என சொல்லப்படும், காதின் பின்புறத்தில், தலையின் உள்ளே கேட்கும் திறன் கருவியை பொருத்தும் அறுவை சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது.எங்கள் மையத்திலும், இதற்கான நவீன வசதி உள்ளது.

இலவசமாகவே பரிசோதனை செய்கிறோம்.குறைபாடு உள்ள குழந்தைக்கு, என்ன விதமான பயிற்சி தருகிறீர்கள்?

காது கேளாமை என்பது குறைபாடு. ஆனால், எல்லா குழந்தைகளையும் போலவே, இவர்களும் குழந்தைகள். ஆறு மாதங்களில் இருந்து, மூன்று வயதிற்குள், சாதாரணமாக குழந்தைக்கு எப்படி கற்றுத் தருகிறோமோ, அதைப் போல, இவர்களுக்கும் கற்றுத் தருகிறோம். படங்கள், நிறங்களை காட்டி, சைகை மொழியை பயன்படுத்தாமல், நாம் சொல்வதை கேட்டு கற்க பழக்குகிறோம். இதற்கென பிரத்யேக புத்தகங்கள், கருவிகள் உள்ளன. பாட திட்டங்களையும் உருவாக்கி உள்ளோம்.

குழந்தை கற்றுக் கொள்ளும் முறை எப்படி இருக்கும்?

முதலில் ஒலியை மட்டும் கவனிப்பர். அதன் பின், ஒலியையும் அதற்கான காரணியையும் கவனிக்கத் துவங்குவர். டம்ளர், ஸ்பூன் இரண்டையும் ஒலி எழுப்பினால், தங்களின் பால் டம்ளர் தயார் என்று புரிந்து கொள்வர். அம்மாவின் காலடி ஓசையும், குரலும் கேட்டால், தனக்கு சாப்பாடு ஊட்டவோ, துாக்கி வைத்துக் கொள்ளவோ அம்மா வருகிறாள் என, தெரிந்து கொள்வர். இப்படியே, தங்களை சுற்றி கேட்கும் பல்வேறு சப்தங்களில் இருந்து, சப்தங்களை வேறுபடுத்தவும், நினைவில் பதிய வைக்கவும் முடியும். தொடர்ந்து சப்தங்களை கேட்டு, புரிந்து கொள்வதோடு, எல்லோருக்கும் இருப்பது போல, தங்களுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இதை சொல்லியே மற்றவர்கள் அழைப்பர் என்பதை தெரிந்து கொள்வர்.அதன் பின், தங்களை சுற்றி இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்வர். பிரச்னை இருப்பதை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பொருத்தமான கருவியை பொருத்தி, தொடர்ந்து பயிற்சி அளித்தால், ஆரோக்கியமான குழந்தையை போலவே, எல்லா விஷயங்களையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.

சரஸ்வதி நாராயணசாமி

கவுரவ இயக்குனர்,

பால வித்யாலயா காது கேளாதோர் பள்ளி,

சென்னை

044 - 2491 7199

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us