
விபத்துக்கள் ஏற்படாமலும் எலும்பு முறிவு ஏற்படுமா?
எலும்பின் உறுதி தன்மை குறையும் போது, எலும்பு தேய்மானத்தால் ஏற்படும்.
சிகிச்சைக்கான புதியதொழில் நுட்பங்கள்..
புதியதாக மின் கீஹோல் சர்ஜரியில்(நுண்துளை அறுவை சிகிச்சை ) ஆர்த்தோ ஸ்கோபி என்ற கருவி மூலம் விரைவில் சரி செய்ய முடியும். முன்பெல்லாம் உடலில் அறுவை சிகிச்சை செய்து தான் எலும்பு முறிவை சரி செய்ய முடியும்.
புதிய தொழில் நுட்பத்தில் சிகிச்சை கால அளவு?
பழைய அறுவை சிகிச்சை முறையில் 2 முதல் 3 மாதம் சிகிச்சை பெற வேண்டும். தற்போதைய தொழில் நுட்பத்தில் 2 நாட்களில் எலும்பு முறிவானவர்களை எழுந்து உட்கார வைக்க முடியும். 10 நாட்களில் பழைய நிலையில் செயல்படலாம்.
எலும்பு தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்னை....
எலும்பு தேய்மானம் முக்கிய பிரச்னை. அனைத்தும்இயந்திர மயமாகிவிட்டது. முன்பெல்லாம் 60 முதல் 65 வயதிற்கு மேல் தான் எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்படுவார்கள். இப்போது 40 வயதாக குறைந்து விட்டது.
எலும்பு தேய்மானத்திற்கான காரணம்?
அன்றாட உணவுபழக்கங்கள்தான். ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றன. கால்பந்து, கபடி விளையாடிய இளைஞர்கள், அலைபேசி, வீடியோ கேம்ஸ்சில் மூழ்குவதால் உடல் உறுப்புகளுக்கு வேலையே இல்லை. பெண்களுக்கு சமையல் வேலையில் அனைத்தும் இயந்திரங்கள்.
உடல் உறுப்புகளுக்கு வேலை இல்லாத போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை எலும்புகள், குறிப்பாக மூட்டுகளால் தாங்க முடிவதில்லை. இதனால் சிறு வயதிலேயே எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் எடையை குறைக்க வழி?
தினமும் நடை பயிற்சி, யோகாசனம் செய்ய வேண்டும். உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யலாம். உணவு பழக்கங்களை கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். உடல் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
எலும்பின் உறுதித்தன்மை குறைய காரணம்?
இயற்கையான உணவு வகைகள் தற்போது இல்லை. பசும்பாலில் கால்சியம் அதிகளவில் இருக்கும். தற்போது பாக்கெட் பால் தான் பயன் படுத்துகிறோம். நொறுக்குத்தீனி அதிகரித்து விட்டது. சாப்பிடும் உணவுகளில்முற்றிலும் சத்துக்கள் இல்லாத நிலையில் தான் எலும்பின் உறுதித்தன்மை குறைந்து விடுகிறது.
எலும்புகள் உறுதி பெற என்ன செய்ய வேண்டும்?
சூரிய ஒளியை உடல் பெற வேண்டும்.
எலும்பிற்கு தேவையான உணவுகள் என்ன?
காய்கறிகள், பால், முட்டை, கடல் உணவுகள், நண்டு, மட்டன், ஈரல் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்ளலாம்.
மூட்டு தேய்மானம் ஏன் ஏற்படுகிறது?
உடல் உயரத்திற்கேற்ப இல்லாமல் எடை அதிகரிக்கும் போது மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் தேவைப்படும். அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.
கழுத்து எலும்பு தேய்மானம் ஏன் ஏற்படுகிறது?
இரு சக்கர வாகனங்களில் அதிக துாரம் பயணிப்பவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதே முக்கிய காரணம்.
இதற்கு தீர்வு?
கழுத்தில் காலர் அணிந்து கொள்ள வேண்டும். யோகாசனங்களை செய்யலாம்.
எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியத்தை நாடலாமா?
காயம் இருந்தால் நாட்டு வைத்தியம் செய்யும் போது காயத்தில் சீழ் பிடித்து பாதிக்கும் நிலை ஏற்படும். கை மூட்டு, கால் மூட்டுகளில் முறிவு ஏற்படும் போது எலும்புகள் சேர்வதற்காக கட்டுக்கள் போடப்படுகிறது. அசைவில்லாமல் இருக்கும் போது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து முடங்கிய கை, கால்களை செயல்படுத்த முடியும். நாட்டு வைத்தியத்தில் அதனை செய்ய முடியாது. எலும்பு முறிவு நேரடியாக இருந்தால் நாட்டு வைத்தியத்தில் சீர் செய்ய முடியும்.பக்க வாட்டுப்பகுதியிலோ, சரிவாகவோ முறிவு ஏற்பட்டால் அலோபதி வைத்தியத்தில் மட்டுமே முழுமையாக சீர் செய்ய முடியும்.
டாக்டர். ஆர்.ஆனந்த்
எலும்பு நோய் சிகிச்சை நிபுணர், ராமநாதபுரம்
97864 03666

