தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சத்து இருந்தால் உதிராது முடி

சத்து இருந்தால் உதிராது முடி

சத்து இருந்தால் உதிராது முடி


PUBLISHED ON : அக் 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்கு காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று, நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் பல உணவுகளில், போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.

பிற நோய் தொற்றுகள் ஏற்பட்டாலும், முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே, தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன? என்பதை கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

முடி அதிகமாக கொட்டத் துவங்கினால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில், நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள், சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே, ஹார்மோன் சுரப்பிகளை சரி செய்ய முடியும் என்கின்றனர், மருத்துவர்கள்.

குளிக்கும் போது! குளிப்பதற்கு முன், கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிகளவில் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடிசுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்.

தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பின், ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி, தலைமுடியை கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின், ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பின், ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்தலாம் என்றால், அரப்பு தேய்த்து குளித்தால், உடலுக்கும் குளிர்ச்சி, தலைமுடிக்கும் பலன்.

குளித்த பின், ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக, உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

சீப்பு: தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும், முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால், முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு, பின் சீப்பை பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்தும் சீப்புகளை, அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

மசாஜ்: விரல் நுனிகளால், தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே, வாரந்தோறும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.

நன்றாக மசித்த வாழைப்பழத்தை, முடியில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து நன்றாக அலச வேண்டும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள், இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்த்து குளித்து வந்தால், சிறந்த பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us