இதயம், சர்க்கரை, தைராய்டு பிரச்னைக்கு வாய்ப்பு நாய், பூனைகளுக்கும் மரபுரீதியாக பாதிக்கும் நோய்கள்
இதயம், சர்க்கரை, தைராய்டு பிரச்னைக்கு வாய்ப்பு நாய், பூனைகளுக்கும் மரபுரீதியாக பாதிக்கும் நோய்கள்
PUBLISHED ON : பிப் 13, 2021

மனிதர்களுக்கு வருவது போல், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளும் இதயம், சர்க்கரை, தைராய்டு போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு உள்ளாகின்றன. அதில் இருந்து அவற்றை பராமரித்து, பாதுகாத்து வளர்ப்பது எப்படி, என விரிவாக விளக்குகிறார், அபிராமபுரத்தில் எஸ்.கே.எஸ்., கால்நடை மருத்துவமனை நடத்தி வரும், கால்நடை மருத்துவர் வி.அருண்.
வீட்டில் எந்தெந்த செல்லப்பிராணிகள் வளர்க்கலாம்?
வீடுகளில் பொதுவாக, நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகளும், கோழி, குருவி, கிளி, புறா போன்ற பறவைகளும் வளர்க்கலாம். தற்போது சிலர் எலி, மூஞ்சுரு, முயல் போன்றவற்றையும் வளர்க்கின்றனர்.இவை தவிர, காட்டில் வாழும் வகையான குரங்கு, பாம்பு போன்ற விலங்குகளைக் கூட, வீட்டில் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். அவற்றை வளர்ப்பது இயற்கைக்கு எதிரானது மட்டுமின்றி சட்ட விரோதமானதும் கூட என்பதால், கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை.
நாய், பூனைகளை பராமரிப்பது எப்படி?
நாய், பூனை இரண்டும், வெவ்வேறு தன்மை கொண்டவை. அவற்றின் குணத்திற்கு ஏற்ப தான், பராமரித்து வளர்க்க வேண்டும். நமது விருப்பத்திற்கு வளர்க்ககூடாது. முன், நாய்களை, வீட்டுக்கு வெளியே வைத்து வளர்த்தனர்.தற்போது நாய், பூனைகளை வீட்டில் குழந்தைகள் போல், அதற்கென தனி, 'ஏசி' அறை, சொகுசான மெத்தை போன்ற, பல்வேறு வசதிகளுடன் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.அப்படி வளர்ப்பதால், அவற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கிறது. இயற்கையாக வளர்ப்பதே நல்லது.
நாய்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் ?
குட்டி நாய்களுக்கு, 'பார்வோ' என்ற நோய்க்கு வாய்ப்புள்ளது. குட்டி நாய்களுக்கு மட்டுமின்றி எந்த வயது நாய்க்கும், நரம்பு தளர்ச்சி சம்பந்தமான, 'கெனையின் டிஸ்டம்பர்' நோய், எலிக்காய்ச்சல் என்று சொல்லக்கூடிய, 'லெப்டோ ஸ்பைரோசிஸ்' போன்ற நோய்கள் வரலாம். இந்த நோய், விலங்குகளிடமிருந்து, மனிதனுக்கு எளிதில் பரவக்கூடியது.மிக முக்கியமாக, 'ரேபீஸ்' நோய் வந்த நாய்கள் கடித்தால், மனிதர்களுக்கு சிகிச்சையே கிடையாது. சட்டப்படி வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு, கண்டிப்பாக, மருத்துவர்களிடம் கொண்டு சென்று, 'ரேபீஸ்' நோய்க்கான தடுப்பூசி போடுவது மிக அவசியம்.
இவை அனைத்தும், நாய்களின் உடலுக்கு உள் வரும் வைரஸ் நோய்கள். இந்த நோய்கள் வராமல் தடுக்க, அதற்கென உள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டு வளர்ப்பது, மிக அவசியம்.தடுப்பூசி மூலம் நாய்களை, நோய்களில் இருந்து காப்பாற்றுவது மட்டுமின்றி, விலங்குகளிடமிருந்து, மனிதருக்கு பரவும் நோய்களில் இருந்து, நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதே நேரம், பாக்டீரியாவால் வளர்ப்பு பிராணிகளுக்கு வரும் நோய்கள், மனிதனுக்கு பரவாது.
உடலுக்கு வெளியே தோலில் வரும் நோய்கள்?
உடலுக்கு வெளியே, தோலில் உன்னி போன்ற தொற்றுன்னிகளால், நாய்களுக்கு காய்ச்சல் ஏற்படும்.இந்த நோய் வந்த நாய்களுக்கு, நோய் முற்றிய நிலையில், ரத்தத்தில் அணுக்கள் குறைந்து, உடம்பில் சிகப்பு புள்ளிகள் தோன்றி, 3 -4 நாட்களில் இறந்துவிடும். பொதுவாக, 20 - 30 சதவீதம் இந்த நோயால் தான், நாய்கள் இறக்கின்றன. கோடைகாலத்தில் தான் இந்த நோய் அதிகமாக பரவும்.
ஆனால், 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக இந்த நோய்களால் நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால், மருத்து மூலம் குணப்படுத்தலாம்.இந்த நோய் வராமல் தடுக்க, நாய்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், அது இருக்கும் இடம், தரை, சுவர் போன்றவற்றை சுகாதாரமாக பராமரிப்பதுடன், தினமும் அதற்கென உள்ள சீப் வைத்து உடலில் பிரஷ் பண்ண வேண்டும்.
பூனை, நாய்களுக்கு இதயநோய் வருமா?
மனிதர்களைப் போலவே நாய், பூனைகளுக்கும் இதய நோய் என்பது, பரம்பரையாக, மரபு ரீதியாக வரக்கூடியது தான். அதிகப்படியான உணவுகள், நொறுக்கு தீனிகளை ஊட்டி விடுவதால், மூன்று நான்கு மடங்கு உடல் பருமன் அடைவது, போதிய நடைபயிற்சி, உடற்பயிற்சி இன்றி சொகுசாக இருப்பதால், இதயம் சீராக இயங்காமல் போகின்றன.தற்போது, நகரில், 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு, இதய நோய்கள் உள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம், உடல் பருமன் மட்டுமே. வளர்ப்பு பிராணிகளுக்கு இதய நோயை கண்டறிய, தற்போது எக்கோ, இசிஜி போன்ற கருவிகள் வந்துவிட்டன.
இதய நோயில் இருந்து காப்பாற்ற, மருந்துகள் உள்ளன. அறுவைச் சிகிச்சை கிடையாது. இதய நோய் என்பது, எந்த வயதிலும் வரலாம். நாய்களின் 3 - 4 வயதில் கவனமாக இருக்க வேண்டும்.
நாய்களுக்கு இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன?
இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்களால் அதிகம் நடக்க முடியாது. நடந்தால் அதிகப்படியான மூச்சு திணறல் ஏற்பட்டு, நாக்கில், எச்சில் அதிகமாக வெளியேறும். நாக்கு, நீல நிறமாக மாறிவிடும்.மேலும் அடிக்கடி இருமல், வாந்தி எடுப்பது போல் செய்வது. சில நேரங்களில் முன்னங்கால்கள் முடக்கம் அடைவது போன்றவை, இதய நோயின் அறிகுறிகள்.
தெரு நாய்களுக்கும் மரபு ரீதியாக இதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம், அவை, பசிக்கும் போது, தேவையான உணவை மட்டுமே எடுத்து கொண்டு, தெருக்களில் சுற்றி கொண்டே இருப்பதால், உடல் பருமன் அடைவது தவிர்க்கப்படுகிறது. அதனால் தைராய்டு, சர்க்கரை நோய்கள் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
செல்லப்பிராணிகளுக்கும் தைராய்டு, சர்க்கரை நோய் வருமா?
நாய், பூனை இரண்டிற்குமே தைராய்டு, சர்க்கரை நோய்களும் வரும். இதற்கும் உடல் பருமனே காரணம். பெரும்பாலும், 30 சதவீத பூனைகள் சர்க்கரை நோய், தைராய்டு போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றன.
இந்த நோய்கள் உள்ளான பூனைகளுக்கு, உணவை கட்டுபாடுடன் வழங்கி, மருந்து கொடுக்க வேண்டும். அவை தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால், உடல் எடையை குறைத்து, எளிதில் காப்பற்றிவிட முடியும்.
செல்லப்பிராணிகளுக்கு என்ன மாதிரி உணவு கொடுக்க வேண்டும்?
நாய்களை பொறுத்தமட்டில், கொஞ்சமாக புரதம், கொழுப்பு சத்துடன் கூடிய உணவுகளை, காலை, மாலை என, இரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும். வளர்ந்த, 10 கிலோ எடையுள்ள நாய்க்கு, ஒரு நாளைக்கு, 150 - 200 கிராம் உணவு போதுமானது.பூனையை கண்டிப்பாக, சைவ உணவுகளை கொடுத்து வளர்க்க முயற்சிக்க கூடாது, அசைவ உணவு கொடுத்து வளர்த்தால் தான், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
இவ்வாறு மருத்துவர் அருண் கூறினார்.
